சோலார் பேனல் ஊழல்: சி.டி. எடுப்பதாக கோவையில் ஊரை கூட்டிய பிஜு ராதாகிருஷ்ணன்
கோவை: சோலார் பேனல் ஊழல் வழக்கில் கைதான பிஜு ராதாகிருஷ்ணன் சில முக்கிய சி.டி.க்களை எடுத்துக் கொடுப்பதாகக் கூறி கோவை வந்தார். அதன் பிறகு என்னவென்றால் கோவையில் இல்லை வெளிநாட்டில் சி.டி.க்கள் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சோலார் பேனல் ஊழல் வழக்கின் முக்கிய குற்றவாளிகள் தொழில் அதிபர் சரிதா நாயர் மற்றும் பிஜு ராதாகிருஷ்ணன். சோலார் பேனல் ஊழல் குறித்து விசாரணை நடத்தும் ஆணையம் முன்பு பிஜு நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அவர் கூறுகையில்,
சோலார் பேனல் ஊழலுக்கும் கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கும் தொடர்பு உள்ளது என்பதை நிரூபிக்கும் சி.டி.க்கள் என்னிடம் உள்ளது. 10 மணிநேரம் அவகாசம் அளித்தால் சி.டி.க்களை எடுத்துக் கொடுக்கிறேன் என்றார்.
இதையடுத்து கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பிஜுவை காரில் கோவைக்கு அழைத்து வந்தனர். அவர் காருக்கு பின்னால் கேமராக்களுடன் பல கார்கள் வந்தன. கோவையில் உள்ள செல்வி என்பவரின் வீட்டிற்கு சென்ற பிஜு ஒரு மஞ்சள் பையை அங்கிருந்து எடுத்தார். அதில் சில சிம்கார்டுகள் மற்றும் பேப்பர்கள் தான் இருந்ததே தவிர சி.டி. எதுவும் இல்லை.
உடனே அவர் சில சக்திவாய்ந்த மனிதர்கள் சி.டி.க்களை எடுத்துவிட்டதாக தெரிவித்தார். பின்னர் சி.டி.க்கள் வெளிநாட்டில் இருப்பதாக கூறியுள்ளார். பிஜு மற்றும் அவருடன் வந்த கார்களால் செல்வி வீட்டிற்கு முன்பு கூட்டம் கூடிவிட்டது.
பிஜுவிடம் எந்த சி.டி.யும் இல்லை என்று சரிதா நாயர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.