இதெல்லாம் சாகசமா?... சென்னையில் பைக் ரேசர்ஸ் அட்டகாசம் தாங்க முடியலேப்பா!
சென்னையில் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகளை பைக் ரேசர்கள் இழுத்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
சென்னை : சென்னையில் சாலைகளில் பாதுகாப்பிற்காக வைக்கப்படும் பேரிகார்டுகளை பைக் ரேசர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றபடி இழுத்துச் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதெல்லாம் ஒரு கொண்டாட்டமா என்று அனைவர் மனதிலும் இந்த காட்சிகள் கேள்விகளை எழுப்புகின்றன.
புத்தாண்டு கொண்டாட்டம், வார இறுதி பைக் ரேஸ் என்று த்ரிலுக்காக அதிவேகமாக பயணம் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர் இளைஞர்கள். போலீசார் எவ்வளவோ எச்சரிக்கை விடுத்த போதும் அதனை பொருட்படுத்தாமல் போலீசாரை ஏமாற்றி ஏதோ சாதனை செய்வதாக நினைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏன் சில நேரங்களில் உயிரையே காவு வாங்கும் பைக் ரேஸ்களில் இளைஞர்கள் ஈடுபட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர்.
கடந்த 31ம் தேதி நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் இரு சக்கர வாகனத்தில் உள்ள சைலென்சர்களை கழட்டிவிட்டுவிட்டு வண்டியை வேகமாக ஓட்டி மக்களுக்கு இன்னல்களை ஏற்படுத்தினர் இளைஞர்கள். அதற்கே பலரின் வசவு வார்த்தைகளை வாங்கிக் கட்டிக் கொண்டனர்.
பைக்ரேசர்களின் அட்டகாசம்
இந்நிலையில் ஜனவரி 2ம் தேதி மெரினா கடற்கரை சாலையின் நடுவே தடுப்புக்காக வைத்திருந்த பேரிகார்டுகளை இளைஞர்கள் பைக்கில் சென்றபடியே இழுத்துச் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இருசக்கர வாகனத்தில் வேகமாக இளைஞர் ஒருவர் ஓட்டிச் செல்ல பின்னால் அமர்ந்திருக்கும் இளைஞர் பேரிகார்டை தனது கைகளால் இழுத்துச் செல்கிறார்.
சாலையோரத்தில் வீசிவிட்டு ஓட்டம்
இந்த பேரிகார்டின் கீழ்ப்பகுதியில் சக்கரம் இல்லாததால் இளைஞர்கள் இழுத்துச் செல்லும் வேகத்தில் சாலையில் உரசி பேரிகார்டில் இருந்து தீப்பொறி கிளம்புகிறது. அதனைக் கூட பொருட்படுத்தாமல் அவர்கள் ஜாலி என்ற பெயரில் இந்த அபாயகரமான செயலைச் செய்கின்றனர். இதே போன்று கோட்டூர்புரம் சாலையில் பைக் ரேஸ் செய்யும் இளைஞர்கள் சக்கரம் பொருத்தப்பட்ட பேரிகார்டு ஒன்றை தரதரவென இழுத்துச் செல்லும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. ஒரு வழியாக சிறிது தூரத்திற்குப் பின்னர் பேரிகார்டை சாலையின் ஓரம் தள்ளிவிட்டு செல்கின்றனர் பைக் ரேசர்கள்.
ஆபத்தை உணராத சாகசம்
ஏதோ சாகசம் போல இந்தக் காட்சிகளை செல்போனில் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த காட்சிகளின் அடிப்படையில் யார் இந்த செயலில் ஈடுபட்டார்கள் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
|
போலீசார் விசாரணை
ஆபத்தான செயலில் ஈடுபட்ட இவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக 4 தனிப்படைகளையும் போக்குவரத்து காவல்துறை அமைத்துள்ளது. இவர்கள் பற்றிய அடையாளம் அல்லது ஏதேனும் தகவல் தெரிந்தால் 9003130103 என்ற எண்ணில்தெரிவிக்குமாறு பொதுமக்களையும் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது