மட்டன் பிரியாணி.. சிக்கன் பீஸ்.. கும்பகோணத்தில் சரத்குமார் கொடுத்த சமத்துவ கறி விருந்து
கும்பகோணம்: லோக்சபா தேர்தல் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து எங்கள் கட்சியின் 19 பேர் கொண்ட உயர் மட்டக் குழுக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்று சரத்குமார் கூறியுள்ளார். யாருடைய கருத்து கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு சிறந்ததாக இருக்கும், வெற்றிகரமாக அமையும் என ஆராய்ந்து நான் முடிவு செய்து ஒருவார காலத்தில் தெரிவிப்பேன் என்றும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் மக்களை நேரடியாக சந்திக்க ஆரம்பித்து விட்டனர். சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் கும்பகோணத்தில் உயர்மட்ட குழுவை கூட்டிய நிலையில் பொதுமக்களுக்கு அசைவ விருந்தும் கொடுத்துள்ளார்.

கும்பகோணம் நால்ரோடு சந்திப்பு அருகேயுள்ள இரு தனியார் திருமண மண்டபங்களில், நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் அசைவச் சமத்துவ விருந்து படைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்க கும்பகோணம் சென்ற நடிகரும், அகில இந்தியச் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரை அவரது கட்சியினர் மாநகர எல்லையான தாராசுரம் பகுதியிலிருந்து ஊர்வலமாக நால்ரோடு சந்திப்பு மண்டபம் வரை அழைத்துச் சென்றனர்.
மேள தாளங்கள் பேண்ட் வாத்தியங்கள் முழங்க, ஏலக்காய் மற்றும் ரோஜா மாலை அணிவித்து சரத்குமாருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த விருந்து படைக்கும் நிகழ்வில் உணவு பரிமாறி சமத்துவ விருந்தை அவர் தொடங்கி வைத்தார். அப்போது உணவு வரிசையில் சாப்பிட அமர்ந்திருந்த சிறுவன் தனது கைகளால் சரத்குமாருக்கு உணவை ஊட்டினார்.
தொடர்ந்து பொது மக்களிடையே பேசிய சரத்குமார், "இது கட்சிக்கு அப்பாற்பட்டு நடைபெறும் நிகழ்வு. முதற்கட்டமாக இத்தகைய விருந்து சேலம் மண்டலத்தில் நடத்தப்பட்டது. அதன் பிறகு தற்போது இன்று கும்பகோணத்தில் நடைபெறுகிறது. இது என் வாழ்நாள் வரை தொடரும். இவ்விருந்து தேர்தல் நடைமுறை காரணமாகச் சில மாதம் தடைப்பட்டாலும் தேர்தல் முடிந்து பிறகு தொடரும்" என்றார். இந்தச் சமத்துவ அசைவ விருந்து மாலை வரை நடைபெற்ற நிலையில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு உண்டு மகிழ்ந்தனர்.












Click it and Unblock the Notifications