பாகற்காய் விளைச்சல் அபாரம்.. 'தித்திக்கும்' மகிழ்ச்சியில் விவசாயிகள்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பாகற்காய் விளைச்சல் அபரிமிதமாக இருப்பதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர் மழை காரணமாக இந்த விளைச்சல் கிடைத்துள்ளதாம். அதேசமயம், விலை சற்று குறைவாக இருப்பதால் விவசாயிகளுக்கு சற்று ஏமாற்றம்தான்.
மழைக்காலங்களில் பயிர் செய்யப்படும் மானாவாரி பயிர்களில், பாகற்காய்க்கு இந்த முறை நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓட்டப்பிடாரம்- கயத்தார்
தூத்துக்குடி மாவட்டத்தில் வடபகுதியான ஓட்டப்பிடாரம், எட்டயபுரம், விளாத்திக்குளம், கோவில்பட்டி, கயத்தார் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்காலங்களில் மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. வானம் பார்த்த பூமியான இப்பகுதிகளில் தற்போது பெய்த மழையைத்தொடர்ந்து எள், கம்பு, சோளம், பாசிப்பயறு, மிளகாய், மாட்டுசோளம், பாகற்காய் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

150 ஏக்கரில்
தொடர்மழையின் காரணமாக மானாவாரி செடிகள் நன்கு வளர்ந்துள்ளன. எட்டயபுரம் அருகேயுள்ள முத்துசாமிபுரம் பகுதிகளில் சுமார் 150ஏக்கர் பரப்பளவில் பாகற்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பாகற்காய் நன்கு காய்த்துள்ள நிலையில் அவற்றை பறித்து விற்பனை செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

விளைச்சல் பல மடங்கு அதிகரிப்பு
கடந்த இரண்டு ஆண்டுகளை காட்டிலும் இந்தஆண்டு பாகற்காய் விளைச்சல் பலமடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் விலை கடந்த ஆண்டை காட்டிலும் குறைந்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வரதராஜன் கூறுவது என்ன...
இதுகுறித்து மாநில மதிமுக விவசாய அணி துணைச்செயலாளர் வரதராஜன் கூறியதாவது, இங்கு விளையும் பாகற்காய் சுவை மிகுந்ததாகும். இவை ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி, மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.

பல மடங்கு விலை குறைவு
கடந்த ஆண்டு பாகற்காய் கிலோ ரூ.40க்கு விற்பனையானது ஆனால் மழை சரியாக பெய்யாத காரணத்தினால் விளைச்சல் குறைவாக இருந்தது. இந்தஆண்டு நல்லமழை பெய்து விளைச்சல் பலமடங்கு அதிகரித்துள்ளது. இருந்தும் விலை பலமடங்கு குறைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications