மீனவர்களைக் கூட்டிச் செல்வதில் சண்டை போட்டு நாறிய அதிமுக, பாஜக தலைவர்கள்!
சென்னை: குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது என்பது இதுதான் போலும். அங்கே, தங்களது குடும்பத் தலைவர்களை பார்க்க கண்களெல்லாம் கண்ணீர் மல்க குடும்பத்தினர் ஒட்டுமொத்தாக திருச்சி விமான நிலையத்தில் காத்திருக்க, பாஜகவினரும், அதிமுகவினரும், அவர்களை மீட்டது யார், பத்திரமாக கூட்டிச் செல்வது யார் என்பதில் சண்டை போட்டு நாறிய செயல் தமிழக மீனவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி விட்டது.
மீனவர்களை வைத்து இந்த இரண்டு கட்சியினரும் முட்டி மோதிக் கொண்டு அரசியல் செய்த செயல் மக்கள் மத்தியில் அறுவெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் அதிமுகவினரைக் கூட ஒரு கணக்கில் சேர்க்கலாம். ஆனால் பாஜகவினர் நடந்து கொண்டதுதான் மகா கொடுமையானது, மகா அரசியல் தனமானது.
இலங்கையிலிருந்து மீட்கப்பட்ட 5 ராமேஸ்வரம் மீனவர்களையும் திருச்சிக்கு அழைத்து வருவதாக தகவல் வெளியான நிலையில் மத்திய அமைச்சர் தனது சுய பப்ளிசிட்டிக்காக டெல்லிக்கு வரவழைத்து பின்னர் அங்கிருந்து சென்னைக்கு கொண்டு வந்தது மகா வெறுப்பை மக்களிடையே ஏற்படுத்தி விட்டது. அதை விட சென்னை விமான நிலையத்திலிருந்து மீனவர்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்வது யார் என்பது தொடர்பாக பாஜக, அதிமுக தலைவர்களிடையே நடந்த தள்ளுமுள்ளும் .. சீச்சீ என்று முகம் சுளிக்க வைத்து விட்டது.
பாவம் அந்த அப்பாவி மீனவர்கள், இலங்கையில் கூட இவ்வளவு சிரமத்தை சந்தித்திருக்க மாட்டார்கள். ஆனால் பாஜகவினர், அதிமுகவினர் கையில் சிக்கித் தவித்த இவர்கள் அவர்களிடமிருந்து மீண்டு வந்ததே பெரிய விடுதலை என்பது போல மாறி விட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகிய 5 மீனவர்களை போதைப்பொருள் கடத்தியதாக கூறி கடந்த 2011-ம் ஆண்டு இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவர்களுக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இவர்களை விடுவிக்கக்கோரி, தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து இலங்கை அதிபர் ராஜபக்சே, 5 மீனவர்களுக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து, பொது மன்னிப்பு வழங்கினார். இதையடுத்து 5 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரும் நவம்பர் 20ம் தேதி மாலை இலங்கையில் இருந்து டெல்லி வந்தனர். பின்னர் அங்கிருந்து இரவு சென்னைக்கு விமானத்தில் வந்தனர். நள்ளிரவு 12.50 மணிக்கு 5 மீனவர்களையும் மத்திய அரசு அதிகாரி செல்வக்குமார் அழைத்து வந்தார். விமான நிலையத்தில் மீனவர்களை வரவேற்க அமைச்சர்கள் பா.வளர்மதி, சுந்தர்ராஜன், ஜெயபால் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் வந்து இருந்தனர்.
இதேபோல் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் விமான நிலையத்துக்கு வந்து இருந்தனர்.
பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பாரதீய ஜனதா கட்சியினர் விமானத்தில் இருந்து இறங்கி வரும் மீனவர்களை வரவேற்க மேல் தளத்திற்கு சென்றனர். தமிழக அமைச்சர்களோ கீழ் தளத்தில் காத்து நின்றனர். விமானம் தரை இறங்கியதும் மீனவர்களை அதிகாரிகள் கீழ் தளம் வழியாக அழைத்து வந்தனர். அவர்களை தமிழக அமைச்சர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர். அப்போது தமிழக அரசின் சார்பில் தலா ரூ.3 லட்சம் நிதி உதவியை அமைச்சர்கள் பா.வளர்மதி, சுந்தர்ராஜன், ஜெயபால் ஆகியோர் வழங்கினர்.
இதையறிந்த பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கீழே வந்து, எங்களுக்கு தெரியாமல் எப்படி அழைத்து வந்தீர்கள்? என கேட்டனர். பின்னர் மீனவர்களை சந்தித்து பேசினார்கள். அதன் பின்னர் 5 மீனவர்களை யார் அழைத்து செல்வது? என்பதில் பிரச்சினை எழுந்தது. இதையடுத்து அதிமுக, பாஜக தரப்பினருக்கு இடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது ஒரு வேனில் ஐந்து மீனவர்களையும் தமிழக அரசுத் தரப்பினர் வேகம் வேகமாக ஏற்றினர். அவர்களை அமைச்சர் வளர்மதி வேன் வாசலை மறிப்பது போல நின்று ஏற்றிக் கொண்டிருந்தார். அவருக்கு முன்பா மீனவர்களிடம் பேச வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜகவினர் முயல கிட்டத்தட்ட ஒரு மோதல் மூளும் சூழ்நிலை அங்கு காணப்பட்டது.
மீனவர்களை ஊருக்கு அனுப்புவது தொடர்பாக இப்படி அதிமுகவினரும், பாஜகவினரும் முட்டி மோதிக் கொண்டதைப் பார்த்து வேடிக்கை பார்க்க வந்தவர்கள் அடடா அரசியல் செய்ய இவர்களுக்கு மேட்டரே கிடைக்கலையா என்று அங்கலாய்க்கும் நிலை ஏற்பட்டது.
விமான நிலையம் வரை பாஜகவின் அரசியல் அட்டகாசமாக இருந்தது என்றால், அங்கிருந்து சொந்த ஊரான தங்கச்சி மடத்திற்கு மீனவர்கள் வந்ததும் அதிமுகவினர் மீனவர்களைக் கைப்பற்றிக் கொண்டனர். ஊரில் மேடை போட்டு மீனவர்களை அமர வைத்து அமைச்சர் ஜெயபால், அன்வர் ராஜா எம்.பி ஆகியோர் மைக்கைப் பிடித்து அம்மா புகழ் பாடிப் பாடிப் பேசினர்.
மீனவர்களை மீ்ட்டு வந்தது முற்றிலும் அம்மாவின் முயற்சியே என்று அவர்கள் வாய் வலிக்க வலிக்க பேசியதைக் கேட்டு கேட்ட காதுகளிலிருந்து தக்காளி சட்னி வராத குறைதான்.
மொத்தத்தில் இலங்கை சிறையிலிருந்து விடுதலையான மீனவர்கள் முதலில் மத்திய அரசு அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்டு டெல்லிக்கும், பின்னர் சென்னைக்கும் அலைக்கழிக்கப்பட்டு அதன் பிறகு சொந்த ஊருக்கு மீண்டு வந்தனர் என்றுதாந் சொல்ல வேண்டும்.
இப்படியா மீனவர்களை வைத்து இரு கட்சிகளும் அரசியல் செய்வது என்ற அவப் பெயர்தான் தற்போது பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் கிடைத்துள்ளது.