கோவையில் அதிமுக-பாஜக தொண்டர்கள் மோதல்.. காரணம் என்ன?
கோவை: கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில், அதிமுக மற்றும் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பும், ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோவை, ரங்கேகவுடர் வீதியில் அமைந்துள்ள ஜெயின் கோயிலுக்கு, கோவை தெற்குத் தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தனது கட்சியினர் சிலருடன் நேற்று பகலில் சென்றார். அங்கு, விதிமுறைகளை மீறி துண்டுப் பிரசுரங்களை வழங்கிப் பிரசாரம் செய்வதாகக்கூறி கட்சியினருடன் அதிமுகவைச் சேர்ந்த மாநகராட்சி மத்திய மண்டலத் தலைவர் ஆதிநாராயணன் அங்கு சென்றார்.
இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியது. இதையடுத்து வானதி சீனிவாசன் அங்கிருந்து மற்றொரு வாகனத்தில் புறப்பட்டுச் சென்றார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்தில் குவிந்த பாஜக தொண்டர்கள், அதிமுகவினரைத் தாக்கினராம். இந்த மோதலில், மத்திய மண்டலத் தலைவர் ஆதிநாராயணன் மற்றும் ஒருசில பெண்கள் உள்ளிட்ட தொண்டர்களும் காயமடைந்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினர் இரு தரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து வானதி சீனிவாசன் கூறியது: குடும்ப நண்பர் காந்தி லால் என்பவர் சமீபத்தில் உயிரிழந்துவிட்டார். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்ததால் அவரது வீட்டுக்குச் செல்ல முடியவில்லை. இதனால், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரங்கல் பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்கவே கோயிலுக்குச் சென்றேன்.
ஆனால், பெண் வேட்பாளர் என்றுகூட பாராமல் அதிமுகவினர் என்னைத் தாக்க முயற்சித்தனர். சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த வட இந்தியர்களை அச்சுறுத்தும் வகையில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு அவர்களை வாக்களிக்க விடாமல் தடுக்க அதிமுகவினர் முயற்சிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications