பாஜக கூட தன்னை மதசார்பற்ற இயக்கமாக காட்டிக்கொள்ள விரும்புகிறது: அர்ஜூன் சம்பத்
தென்காசி: கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை தங்களுடைய கூட்டணியில் இணைத்து கொள்ள விரும்பும் கட்சிகள் இந்து இயக்கங்களை சேர்த்துக்கொள்ள தயங்குகின்றன. பாஜக கூட தன்னை மதசார்பற்ற இயக்கமாக காட்டிக்கொள்ள விரும்புகிறது என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.
இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று மாலை தென்காசி வந்தார். அங்கு கடந்த 2006-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் குமார் பாண்டியன் வீட்டுக்கு சென்ற அவர், அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அர்ஜூன் சம்பத் கூறியதாவது: வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி தனித்துப் போட்டியிட உள்ளது. தற்போது நடைபெறவிருக்கும் தேர்தலில் இந்து மக்கள் கட்சி சார்பில் 10 பேர் வெற்றி பெற்று பேரவைக்குள் செல்வோம். 2021 தேர்தலில் எங்களுடைய ஆட்சி அமையும்.
நாங்கள் அனைத்து அமைப்புகளுடனும் கூட்டணி அமைக்க முயற்சித்தோம். கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை தங்களுடைய கூட்டணியில் இணைத்து கொள்ள விரும்பும் கட்சிகள் இந்து இயக்கங்களை சேர்த்துக்கொள்ள தயங்குகின்றன. பாஜக கூட தன்னை மதசார்பற்ற இயக்கமாக காட்டிக்கொள்ள விரும்புகிறது.
அனைத்து பகுதிகளிலும் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொண்டு சொத்துகளை மீட்டுவருகின்றனர். ஆனால் தென்காசியில் மட்டும் காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு சொந்தமான சொத்துகள் மீட்கப்படவில்லை.
இந்து இயக்கங்களுக்காக போராடிய 138 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு தியாகிகளுகான பட்டயத்தை இந்து மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் வழங்குவோம். தமிழகத்தில் இந்து இயக்க தலைவர்களை காப்பற்ற மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார் அர்ஜூன் சம்பத்.












Click it and Unblock the Notifications