திருப்பூர் தொகுதியில் அண்ணாமலையின் ‘ரைட் ஹேண்ட்’ போட்டி.. யார் இந்த ஏபி முருகானந்தம்?
திருப்பூர்: தமிழ்நாட்டுக்கான பாஜகவின் அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அண்ணாமலையின் ரைட் ஹேண்டாக விளங்கும் ஏ.பி.முருகானந்தம் திருப்பூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், 39 தொகுதிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை தேசிய ஜனநாயக கூட்டணி முடித்துள்ளது. பாஜகவின் வேட்பாளர்கள் தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் 20 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட உள்ளனர். பாஜகவின் தாமரை சின்னத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மேலும் ஒரு 4 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

பாஜக வேட்பாளர் பட்டியல்: தமிழ்நாட்டில் பாஜக சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் 9 வேட்பாளர்கள் பட்டியல் நேற்று மாலை வெளியிடப்ப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது 15 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏபி முருகானந்தம் நிறுத்தப்பட்டுள்ளார்.
கொங்கு மண்டலம் பாஜகவுக்கு செல்வாக்கு இருக்கும் பகுதி என்பதால் இம்முறை கண்டிப்பாக சில தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என முனைப்பில் பாஜக இருக்கிறது. மாநில தலைவர் அண்ணாமலை கோவையிலும், மத்திய அமைச்சர் எல்.முருகன் நீலகிரி தொகுதியிலும் போட்டியிடும் நிலையில், திருப்பூரில் ஏ.பி.முருகானந்தம், பொள்ளாச்சியில் வசந்தராஜன் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
யார் இந்த ஏபி முருகானந்தம்?: பாஜக மாநில பொதுச்செயலாளராக இருப்பவர் ஏ.பி.முருகானந்தம். கோவையை சேர்ந்த ஏபி முருகானந்தத்தின் பெயர், கடந்த 2019ஆம் ஆண்டே தமிழிசைக்கு பிறகு, பாஜக மாநிலத் தலைவருக்கான பரிசீலனையில் இருந்தது. அந்த அளவுக்கு கட்சியில் செல்வாக்கு மிக்கவர். மாநிலத் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பின்னர், அவருக்கு நெருக்கமானவராகவும் இருந்து வருகிறார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஏ.பி.முருகானந்தம் பொறியியல் மற்றும் சட்டத் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். 1998 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி மண்டல் தலைவராக முதன் முதலாக பொறுப்புக்கு வந்தார் முருகானந்தம்.
கொங்கு மண்டல பாஜகவில் முக்கிய புள்ளி: கோவை இளைஞரணி மண்டல பொறுப்பில் இருந்து துவங்கி மாவட்ட பொதுச்செயலாளர், மாநில பொதுச்செயலாளர், தேசிய செயற்குழு உறுப்பினர், அகில இந்திய இளைஞரணி செயலாளர், இளைஞர் அணியின் அகில இந்திய துணைத் தலைவர் என இருபது வருடங்களில் ஏ.பி.முருகானந்தத்ம் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
கேரளா, மேற்கு வங்கம், கர்நாடகா, மஹராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார் ஏ.பி.முருகானந்தம், கட்சிக்குள் புதியவர்களை கொண்டு வந்து இளைஞரணிக்கு பலமான அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுத்ததில் இவரது பங்கு மிக முக்கியமானது என்கிறார்கள் பாஜகவினர். மேலும், அண்ணாமலையின் பாதயாத்திரையின்போதும் அவருக்கு உறுதுணையாக எப்போதும் கூடவே இருந்தார்.
கடந்த ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வந்தபோதே அத்தொகுதியில் பாஜகவின் ஏபி முருகானந்தத்தை வேட்பாளராக நிறுத்த அண்ணாமலை முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இருப்பினும் ஈபிஎஸ் அண்ணாமலையை நேரில் சந்தித்து தாங்கள் நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு கோரிக்கை விடுத்ததால் பாஜக தனித்து நிற்கும் திட்டத்தைக் கைவிட்டிருந்தது.
திருப்பூர் தொகுதி நிலவரம்: இந்நிலையில், திருப்பூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக ஏபி முருகானந்தம் அறிவிக்கப்பட்டுள்ளார். 2009ல் தொகுதி மறு சீரமைப்புக்குப் பின்னர் உருவான திருப்பூர் தொகுதியில் அதிமுக 2 முறையும், சிபிஐ கட்சி ஒரு முறையும் வென்றுள்ளது. கடந்த முறை பாஜக கூட்டணியில் அதிமுக போட்டியிட்டு சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுப்பராயனிடம் தோல்வியடைந்தது.
இந்த தேர்தலிலும் திமுக கூட்டணியில் திருப்பூர் தொகுதி சிபிஐ கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் அதிமுக நேரடியாக போட்டியிடுகிறது. அதிமுக சார்பில் அருணாசலம் போட்டியிடுகிறார். இந்நிலையில் பாஜக சார்பில் ஏபி முருகானந்தம் களமிறக்கப்பட்டுள்ளார்.
பாஜக இன்று வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியல்
1) திருவள்ளூர் - பாலகணபதி
2) வட சென்னை - பால் கனகராஜ்
3) திருவண்ணாமலை - அஸ்வத்தாமன்
4) நாமக்கல் - கே.பி.ராமலிங்கம்
5) திருப்பூர் - முருகானந்தம்
6) பொள்ளாச்சி - வசந்தராஜன்
7) கரூர் - செந்தில்நாதன்
8) சிதம்பரம் - கார்த்தியாயினி
9) நாகை - எஸ்.ஜி.எம்.ரமேஷ்
10) தஞ்சை - எம்.முருகானந்தம்
11) சிவகங்கை - தேவநாதன் யாதவ்
12) மதுரை - ராம சீனிவாசன்
13) விருதுநகர் - ராதிகா சரத்குமார்
14) தென்காசி - ஜான் பாண்டியன்
15) புதுச்சேரி - நமச்சிவாயம்












Click it and Unblock the Notifications