பாஜக பிரமுகர் மீது தாக்குதல்- வாணியம்பாடியில் முழு கடையடைப்பு போராட்டம்!!
வாணியம்பாடி: வாணியம்பாடியில் பாஜக பிரமுகர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினரும், அறநிலையப்பிரிவு துணைத் தலைவருமான சிவப்பிரகாசம். நேற்று காலை வாணியம்பாடியில் உள்ள பிள்ளையார் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு வெளியில் வந்த போது மூன்று பேர் கொண்ட கும்பல் தாக்கிவிட்டு தப்பியோடியது.

இந்த தாக்குதலில் சிவப்பிரகாசத்தின் தலை, கால் ஆகியவற்றில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. அவரை அங்கிருந்த சிலர் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த தகவல் இந்துத்துவா அமைப்புகளுக்கு தெரியவர அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில் பாஜக அகில இந்திய செயலாளர்களில் ஒருவரான எச்.ராஜா உடனடியாக வாணியம்பாடி சென்றார். அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிவப்பிரகாசத்தை சந்தித்து ஆறுதல் கூறி நடந்ததை கேட்டறிந்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, காவல்துறையில் உள்ள கறுப்பு ஆடுகளால் தொடர்ந்து இந்துத்துவா தலைவர்கள் தாக்கப்படுகிறார்கள் என சாடினார்.
இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி வாணியம்பாடி நகரில் இன்று ஒருநாள் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. இதனால் சி.எல்.ரோடு, கச்சேரி ரோடு, பஸ் நிலையம், பூக்கடை பஜார், முகம்மது அலி பஜார் பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. ஆம்பூரில் பஜார் பகுதி, மார்க்கெட், பஸ் நிலையம் என அனைத்து இடங்களிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் பேருந்துகள், ஆட்டோக்கள் ஆகியவை வழக்கம் போல் இயங்கின. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கவும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications