2 இட்லி, ஒரு வடை கொடுங்க, நான் செக் பண்ணனும்.. பாண்டி பஜாரை பதற வைத்த தமிழிசை
Recommended Video
சென்னை: உணவகங்களில் ஜிஎஸ்டி விலை 5சதவிதமாக குறைக்கப்பட்டிருக்கிறதா, இல்லையா என்பதை பாண்டிபஜார் உணவகத்தில் தமிழிசை சௌந்தர்ராஜன் நேரில் ஆய்வு செய்து தெரிந்துகொண்டார்.
கவுகாத்தியில் சமீபத்தில் நடைபெற்ற 23வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட வரி மாற்றர முடிவுகளின்படி, ரெஸ்டாரண்டுகளின் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இதுவரை 100 ரூபாய்க்கு சாப்பிட்டால் பில் 118 ரூபாயாக இருந்த நிலையில், அது நவம்பர் 15ம் தேதி, திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி அறிமுகமான நாளில் இருந்து, ரூ.105 என குறைக்கப்பட வேண்டும்.
குறைக்கப்பட்ட பில்
குறைக்கப்பட்ட பில் தொகை மாற்றப்பட்ட ஜிஎஸ்டி வரிப்படி சில ஹோட்டல்கள் 15ம் தேதி முதல் பில் தொகையை குறைக்க ஆரம்பித்துவிட்டன. பல நெட்டிசன்கள் தாங்கள் சாப்பிட்ட உணவுக்கான பில்லை, சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து மகிழ்ச்சி வெளிப்படுத்தினர்.
மோசடி ரெஸ்டாரண்டுகள்
அதேநேரம், சில மோசடி ரெஸ்டாரண்டுகள் இதை செய்வதில்லை. ஜிஎஸ்டி 18 சதவீதமாக இருந்தபோது இருந்த விலையிலேயே உணவு பொருட்களை விற்பனை செய்கிறார்கள். ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டு பில்லில் காட்டியபோதிலும், உணவு பொருளின் விலையை ஏற்றிவிட்டனர். எனவே 14ம் தேதி என்ன விலைக்கு உணவு விற்றதோ அதே விலைக்கு 15ம் தேதிக்கு பிறகும் உணவு விற்கப்படுகிறது.
தமிழிசை தடாலடி
இதுகுறித்து மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திய நிலையில், இன்று காலை பாண்டிபஜார் பகுதியிலுள்ள ஒரு ரெஸ்டாரண்டில் தமிழிசை ஆய்வு நடத்தினார்.
இட்லி, வடை சாப்பிட்டார்
2 இட்லிகளும், ஒரு வடையும் வாங்கி சாப்பிட்டார் தமிழிசை. இதன்பிறகு பில் தொகையை செக் செய்தார். பின்னர் நிருபர்களிடம் பேசிய தமிழிசை, அனைத்து ஹோட்டல்களும், ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலனை மக்களுக்கு வழங்க வேண்டும் என்றார். கமல் டிவிட்டரில் போடும் கருத்துகள் பற்றிய கேள்விக்கு, அதை புரிந்துகொள்ள கோனார் தமிழ் உரை தேவை என்றார்.