தர்மபுரி குழந்தைகள் பலி: அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய தமிழிசை வலியுறுத்தல்
சென்னை: தர்மபுரி அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தர்மபுரி அரசு மருத்துவமனையில் கடந்த நான்கு நாட்களில் 13 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒரே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட பச்சிளங் குழந்தைகள் இறந்த சம்பவத்தை சாதாரணமாக நினைத்து விட முடியாது.
இது இயற்கையான மரணம். நான் ஒரு மருத்துவர், அரசு மருத்துவமனையில் இருக்க வேண்டிய மருத்துவ வசதிகள் என்னவென்பது எனக்கு தெரியும்.
தர்மபுரி அரசு மருத்துவமனையில், அடிப்படை வசதிகள் இல்லாததுதான் குழந்தைகள் இறப்பிற்கு காரணம். மருத்துவமனையில் 400 பணியிடங்கள் கூட காலியாக இருந்தது என்றும் கூறுகிறார்கள்.
எனவே, பச்சிளங்குழந்தைகள் வார்டில் எத்தனை டாக்டர்கள், நர்சுகள் பணியாற்றினார்கள். என்னென்ன வசதிகள் இருந்தது என்பதை அரசு விளக்க வேண்டும். குழந்தைகள் சிகிச்சை பெறுவதற்கு ஏற்ற வசதி இருக்கிறதா? என்பது குறித்து அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்.
இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அப்போது தான் அது வெளிப்படையான விசாரணையாக இருக்கும்" இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications