ஐடி ரெய்டின் போது செந்தில் பாலாஜியின் வீட்டில் 150 கிலோ தங்கம் பறிமுதலாம்.. எச்.ராஜா பரபரப்பு புகார்
திருச்சி: வருமான வரித் துறை சோதனையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் இருந்து 150 கிலோ தங்கம் பிடிபட்டதாக கூறுகிறார்கள் என பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார்.
பாஜகவின் 9ஆவது ஆண்டு சாதனைகள் குறித்து தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா திருச்சியில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எச்.ராஜா பேசுகையில் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு விதி எண் 370 உடன் 35 ஏ வையும் ரத்து செய்தது.
ராமர் கோயில் பிரச்சினையை மிகவும் சுலபமாக தீர்த்து வைத்தோம். இந்தியாவிலேயே ஒரு மிக பெரிய சிக்கலான விஷயத்தை சரி செய்தது பாஜக. அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் பாஜக என்ன செய்ய போகிறது என அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் பாஜக அரசு மிகவும் சுலபமாக தீர்த்து வைத்தது. மேலும் அனைவருக்கும் வீடு திட்டத்தில் 3 கோடி பேருக்கு வீடு கட்டி கொடுத்துள்ளோம். 11 கோடி 72 லட்சம் மக்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். இது போல் எண்ணற்ற சாதனைகளை பாஜக அரசு செய்துள்ளது என்றார்.
இதைத் தொடர்ந்து ஒடிஸா ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என திமுக உள்ளிட்ட கட்சிகள் வைக்கும் கோரிக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் தமிழகத்தில் கள்ளச்சாராய மரணத்தால் 23 பேர் இறந்தனர். அப்போது செந்தில் பாலாஜியோ அல்லது முதல்வரோ ராஜினாமா செய்தார்களா?
ஆனால் இந்த ரயில் விபத்தில் மட்டும் பிரதமர் ஏன் பதவி விலக வேண்டும். அவரை பதவி விலக கூறுவது ஏன் என விமர்சித்தார். ஒடிஸா ரயில் விபத்திற்கான காரணத்தை என்ன என்பதை கண்டுபிடிக்க வேண்டும். பிரதமர் மோடியும் இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறியவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் செந்தில் பாலாஜியை பற்றி பேசுவதற்கு எந்த அமைச்சருக்கும் அதிகாரம் கொடுக்கப்படவில்லை. திருச்சியில் கே.என்.நேருவிடம் கேள்வி கேட்டால் என்ன சொல்கிறார்? செந்தில் பாலாஜி வீடு ரெய்டு தொடர்பாக கேள்வி கேட்டால் சாக்கடை அடைத்தால் கேளு பதில் சொல்கிறேன் என்கிறார்.
அரசு மதுபான கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவது ரெய்டுக்கு முன்னாடியா பின்னாடியா நீங்களே சொல்லுங்கள். இவை அனைத்துமே ரெய்டுக்கு முன் கூட்டியே நடந்துவிட்டது. செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரி சோதனையின் போது 150 கிலோ தங்கம் பிடிபட்டதாக கூறுகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர வாய்ப்பில்லை என தெரிவித்தார்.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்த போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார. அப்போது அவர் கூறுகையில் என் வீட்டில் ரெய்டு நடத்தவில்லை. எனது தம்பி, நண்பர்கள் வீட்டில்தான் ரெய்டு நடத்துகிறார்கள். ரெய்டின் போது ஏதாவது தவறு இருந்தால் அதை சரி செய்ய அவர்கள் தயாராக இருக்கிறார்கள். இதுவரை அவர்கள் யாரும் வரி ஏய்ப்பு செய்யவில்லை என கூறியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications