கார்த்தி சிதம்பரம் கைதில் தவறான உள்நோக்கம் கற்பிக்கப்படுவதற்கு பாஜக பொறுப்பல்ல: பொன்.ராதாகிருஷ்ணன்
கார்த்தி சிதம்பரம் கைதில் பாஜகவிற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை : கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் புதுக்கோட்டையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, மறைந்த காஞ்சி ஜெயேந்திரருக்கு இரங்கல் தெரிவித்தார்.

மேலும், ஈரான் நாட்டு சிறையில் இருந்த 15 மீனவர்கள் இந்திய அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு தமிழகம் வந்துள்ளதைக் குறிப்பிட்டார். தொடர்ந்து காஞ்சிபுரம் முதியோர் காப்பக விவகாரத்தில் தமிழக அரசியல் தலைவர்கள் மெளனம் காப்பது ஏன் என்று அவர் கேள்வியெழுப்பினார்.
மேலும் கார்த்தி சிதம்பரம் கைது நீரவ் மோடி விவகாரத்தை மறைப்பதற்காகவே நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதில் துளியளவும் உண்மையில்லை.
கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதில் மத்திய அரசுக்கு எந்த வித தொடர்பும் இல்லை. இதில் ஏன் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகக் கற்பிக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications