பாஜகவும் பாறையும் ஒன்று... எங்களோடு மோத வேண்டாம்- ஹெச்.ராஜா கொந்தளிப்பு
பாஜகவும் பாறையும் ஒன்று அதனால் எங்களோடு யாரும் மோத வேண்டாம் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
ராசிபுரம்: பாஜகவும் பாறையும் ஒன்று. அதனால் எங்களோடு யாரும் மோதிப்பார்க்க எண்ண வேண்டாம் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
இன்று ராசிபுரம் வந்திருந்த ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், " பாஜகவும் பாறையும் ஒன்று. யாரும் மோதிப்பார்க்க நினைக்க வேண்டாம். தமிழகத்தில் சீமானும் திருமாவளவனும் கலவரப் புத்தியோடு இருக்கிறார்கள்." என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், சென்னையில் உள்ள ஐ.ஐ.டி.யில் மாட்டிறைச்சிக்கு அனுமதி கொடுத்த மாணவர்களின் டீன் சிவகுமாருக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவரை ஐ.ஐ.டி. நிர்வாகம் சஸ்பெண்ட் செய்ய வேண்டும். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தை போல தத்தாரிகளின் கூடாரமாக ஐ.ஐ.டி.யை மாற்ற டீன் சிவகுமார் முயற்சி செய்து வருகிறார். இதுபோன்ற சக்திகளை அனுமதித்தால் ஐ.ஐ.டி.க்குள் நாங்களும் உள்ளே வரவேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரிக்கிறேன்.
மத்திய அரசின் திட்டம்
மத்திய அரசின் திட்டங்களை எல்லாம் தாங்கள் தான் கொண்டு வந்தது போல மாநில அரசு செயல்படுவது சரி அல்ல. மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசின் திட்டங்களாகவே மக்களை சென்றடைய வேண்டும். அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கழிப்பறை பணம் திருடும் அதிமுக அரசு
மத்திய அரசு திட்டங்களில் பிரதமர் மோடியின் படம் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். கழிப்பறை திட்டத்தில் ஏற்கெனவே இருக்கும் கழிப்பறைகளில் வண்ணங்களை மட்டும் பூசிவிட்டு பணத்தை எடுத்து விடுகின்றனர். கழிப்பறையில் கூட பணத்தை திருடும் அரசை இதுவரை நான் பார்த்ததில்லை.
20 நாள் பிரசாரக் கூட்டங்கள்
மோடியின் திட்டங்களை தமிழக மக்களுக்கு எடுத்துச் சொல்ல 20 நாள் பிரசார கூட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில் மத்திய அமைச்சர்களும், பாஜக ஆளும் மாநிலங்களை சேர்ந்த தலைவர்களும் தமிழகம் வந்து பிரசாரம் செய்ய உள்ளனர்.
மோடியை பாராட்டிய வைகோ
மோடி ஊழலற்ற ஆட்சி நடத்துகிறார் என்று எனது நண்பர் வைகோ கூட பாராட்டி இருக்கிறார். அவரது பாராட்டை மற்றவர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஸ்டாலின் அட்டாக்
எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னை சந்திப்பதற்கு பிரதமர் மோடி நேரம் ஒதுக்கவில்லை என்று கூறி இருக்கிறார். மு.க. ஸ்டாலின் போலி வேடம் போடுவதையும், பொய் பேசுவதையும் நிறுத்திக் கொண்டால் பிரதமரை சந்திக்க நானே நேரடியாக அனுமதி வாங்கி தருவேன்.
ஹிந்தியை மு.க. ஸ்டாலின் எதிர்த்து வருகிறார். ஆனால் ஸ்டாலின் உறவினர் நடத்தும் பள்ளியில் தமிழில் பேச அனுமதிப்பது இல்லை, ஆங்கிலத்தில் தான் பேச அனுமதிக்கிறார்கள். தமிழில் பேசும் மாணவருக்கு ரூ. 500 வரை அபராதம் விதிக்கிறார்கள். முதலில் அந்த பள்ளியில் தமிழில் பேச அனுமதித்துவிட்டு இவர் ஹிந்தியை பற்றி பேசட்டும்.
இவ்வாறு ஹெச். ராஜா கூறினார்.