பாஜக கூட்டணிக்கு ஜி.கே.வாசனை இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.. பாமக- வும் இணையும்... இல.கணேசன்
மதுரை : பாஜக கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை இருகரம் கூப்பி வரவேற்பதாக பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க. அல்லாத மாற்று அணியை பா.ஜ.க. அமைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய போது இல.கணேசன் கூறியதாவது...

பா.ம.க. வினர் வேகமாகச் செயல்பட்டுவருகின்றனர். அதே நேரத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், அவர்கள் விவேகமாக முடிவெடுப்பார்கள் என காத்திருக்கிறோம். நிச்சயம் அவர்கள் பாஜக கூட்டணியிலே இடம் பெறுவார்கள்.
தேர்தல் கூட்டணி குறித்து தமிழக பாஜக எடுக்கும் முடிவுக்கு கட்சியின் தலைமை சம்மதிக்கும். ஆகவே தற்போது தொண்டர் கருத்தை கேட்டறிந்து வருகிறோம். தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத மாற்று அணியை பா.ஜ.க. அமைக்கும்.
எதிர்க்கட்சியினர் ஒன்றாக சேர்ந்து தேர்தலைச் சந்திப்பது பலத்தை கூடுதலாக்கும். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நற்குணமிக்கவர். பக்குவமானவர். தேசியத்தை வலுப்படுத்த அவர் பாஜக கூட்டணியில் சேரவேண்டும் என இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.
பாஜகவினருக்கு ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு தாய்வீடு போன்றது. குழந்தை நன்றாக இருக்கவேண்டும் என தாய் கவலைப்படுவதில் தவறில்லை. தி.மு.க.வில் குடும்பப் பிரச்னை எதிரொலிப்பது அக்கட்சியினரிடையே தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.
இலங்கையில் உள்ள தமிழர்களிடம் தற்போது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அவர்களது நம்பிக்கையை நிச்சயம் பிரதமர் மோடி நிறைவேற்றுவார்.
இலங்கைத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் கூட்டமைப்பு சார்பில் அனுபவமிக்க சம்பந்தம் எதிர்க்கட்சி தலைவராகியுள்ளார். அவர் தமது கடமையை சிறப்பாக ஆற்றி தமிழர் உரிமைக்குப் பாடுபடுவார்.
இவ்வாறு இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறினார்.












Click it and Unblock the Notifications