நாமக்கல் அருகே சாலை விபத்தில் பாஜக பிரமுகர் வால்பாறை ஜெயராமன் பலி!
நாமக்கல்: நாமக்கல் அருகே தனியார் கல்லூரி மீது கார் மோதிய விபத்தில் பாஜக பிரமுகர் வால்பாறை ஜெயராமன் பலியானார். அவரது உடலுக்கு ஏராளமான பாஜகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 60). இவர் கோவை பாஜக தெற்கு மாவட்ட பொது செயலாளராக இருந்தார்.
நேற்று மாலை அவர் சொந்த வேலை காரணமாக ஸ்கார்பியோ காரில் சேலத்துக்கு வந்து கொண்டு இருந்தார். காலை 9 மணிக்கு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கவுரி தியேட்டர் அருகே காந்தி நகர் பகுதியில் ஒரு வளைவில் வந்த போது திடீரென்று ஈரோட்டை சேர்ந்த தனியார் கல்லூரி பேருந்தை டிரைவர் திருப்பினார். இதனால் கார் டிரைவர் அதிர்ச்சி அடைந்தார்.
கார் வேகத்தை குறைக்க முயன்றும் முடியவில்லை. எதிர்பாராத விதமாக அந்த கார் தனியார் கல்லூரி பேருந்து மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே வால்பாறை ஜெயராமன் பலியானார். அவரது உடல் பிரேதபரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்தில் தனியார் பேருந்து மற்றும் கார் டிரைவர்கள், பேருந்தில் பயணம் செய்த ஈரோடு தனியார் கல்லூரியில் படிக்கும் குமாராபாளையத்தை சேர்ந்த மாணவி சசிகலா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து குமாராபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.