மு.க. அழகிரியுடன் பாஜக, மதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் சந்திப்பு
மதுரை: நரேந்திர மோடி பிரதமராக வர வேண்டும் என்று அழகிரி கூறியதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்க வந்தேன். மற்றபடி எதுவும் இல்லை என்று பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
முன்னாள் தி.மு.க. தென் மண்டல அமைப்பாளர் மு.க.அழகிரியை, தேனி நாடாளுமன்ற தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் அழகுசுந்தரமும், சிவங்கை தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவும், மதுரை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பரத் நாச்சியப்பனும் இன்று சந்தித்துப் பேசினர்.
மதுரையில் உள்ள அழகிரி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இன்று காலை 10.25 மணிக்கு ஹெச்.ராஜா சென்றார். அப்போது, அழகிரி அவரை வரவேற்றார். சுமார் அரை நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, கூறியதாவது:

அழகிரிக்கு நன்றி
நரேந்திர மோடி பிரதமராக வர வேண்டும் என்று அழகிரி கூறியதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்க வந்தேன். மற்றபடி எதுவும் இல்லை என்று ஹெச்.ராஜா கூறினார்.

பாஜகவில் பொறுப்பு
பா.ஜ.க.வில் அழகிரிக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த ராஜா, அப்படி எந்தவொரு திட்டமும் இல்லை என்றார்.
உங்களுக்கு ஆதரவு தெரிவித்தாரா என்ற கேள்விக்கு, இன்னும் சொல்லவில்லை. ஆதரவு தெரிவிக்க வாய்ப்பு இருக்கிறது என்றார்.

அழகு சுந்தரம் சந்திப்பு
இதைத் தொடர்ந்து, தேனி நாடாளுமன்ற தொகுதி ம.தி.மு.க வேட்பாளர் அழகுசுந்தரமும், அழகிரியை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகுசுந்தரம், "பொதுச் செயலாளர் வைகோ மரியாதை நிமித்தமாக நேற்று சந்தித்து பேசினார். மதுரை சட்டமன்ற தொகுதி தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டு வருவதால் மரியாதை நிமித்தமாக அழகிரியை சந்தித்து பேசினேன்" என்று கூறினார்.

நேசிக்கும் மனிதர்கள் சந்திப்பு
இது குறித்து அழகிரியிடம் கேட்டபோது, என்னை நேசிக்கும் மனிதர்கள் கட்சியை விட்டு தாண்டி வந்து சந்தித்து போகிறார்கள். உங்களுக்கே தெரியும் (பத்திரிகையாளர்கள்) தேசிய தலைவர்கள் என்னிடம் தொலைபேசியில் விசாரிக்கிறார்கள். மறுபடியும் சொல்கிறேன். எனது ஆதரவாளர்களை சந்தித்து கொண்டு வருகிறேன். மிக விரைவில் ஆதரவாளர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி நடப்பேன் என்றார்.

ஆதரவாளர்களுடன் பேசுவேன்
பா.ஜ.க.வை ஆதரிப்பீர்களா என்ற கேள்விக்கு, அது குறித்து ஆதரவாளர்களுடன் பேசித்தான் முடிவு எடுப்பேன் என்றார் அழகிரி.

நான் ஆதரவு கேட்டேன்
இதைத் தொடர்ந்து பேசிய, மதுரை தொகுதி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பரத் நாச்சியப்பன், எனக்கு ஆதரவு தருமாறு கேட்டுள்ளேன். அழகிரி பரிசீலிப்பதாக கூறியுள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications