பின்வாசல் வழியாக அதிகாரத்தை கைப்பற்றும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை- தமிழிசை, ஹெச். ராஜா
புறவாசல் வழியாக அதிகாரத்தைப் பயன்படுத்தும் எந்த எண்ணமும் மத்திய அரசுக்கு இல்லை என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும், தேசிய செயலாளர் ஹெச். ராஜாவும் கூறியுள்ளனர்.
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரத்தையும், கட்சி அதிகாரத்தையும் பாஜக தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள திட்டம் போடுவதாக விமர்சனம் எழுந்துள்ளது.
இது குறித்து நேற்று சென்னை விமான நிலையத்தில் பேசிய பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தில் மக்கள் தேர்ந்தெடுத்துள்ள அரசுக்கு மரியாதை கொடுக்கும் என்று கூறினார்.

தமிழக அரசுக்கு நேர்மறையான முறையில் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்துவருவதாக தமிழிசை சவுந்தரராஜன் குறிப்பிட்டார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மதிப்பளிக்கும் கட்சி பாஜக என்று குறிப்பிட்ட அவர், புறவாசல் வழியாக அதிகாரத்தைப் பயன்படுத்தும் எந்த எண்ணமும் மத்திய அரசுக்கு இல்லை என்றும் தமிழிசை சவுந்தராஜன் கூறினார்.
இதே கேள்விக்கு பதிலளித்துள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைத்தான் மத்திய அரசு எடுத்தது. இதில் பாஜகவுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்று கூறியுள்ளார்.
மறைந்த முதல்வருக்கு பிரதமர் அஞ்சலி செலுத்த வருவது நடைமுறை வழக்கம். அரசியல் நாகரிகம். இதையெல்லாம் புரிந்துகொள்ளாதவர்கள்தான், பாஜக குறுக்கு வழியில் அதிகாரத்தை கைப்பற்றப் போவதாக பிரச்சாரம் செய்கிறார்கள்.
எதிரியைக்கூட நேருக்கு நேராகத்தான் சந்திக்க நினைப்பவர் பிரதமர் மோடி. எனவே, பின் கதவு வழியாக அதிகாரத்தை கைப்பற்ற வேண்டிய அவசியமோ எண்ணமோ பாஜகவுக்கு என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications