தமிமீழத்தை அமைப்பதில் பா.ஜ.க.வுக்கு உடன்பாடு இல்லைதான்: வைகோ ஒப்புதல்!!
சென்னை: இலங்கையில் தமிழீழத்தை அமைப்பதில் பாரதிய ஜனதா கட்சிக்கு உடன்பாடு இல்லை என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பல்வேறு கொள்கைகளைக் கொண்ட கட்சிகள், ஒரு தேர்தலை சந்திப்பதற்காக கூட்டணி அமைக்கின்றன. அதற்காக அவர்கள் தங்களுடைய கொள்கைகளை விட்டுக்கொடுப்பது இல்லை.
இந்த தேர்தலில் நாங்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து இருக்கின்றோம். தமிழ் ஈழம் அமைப்பது குறித்து பா.ஜ.க.வுக்கு உடன்பாடு இல்லை; அவர்களுடைய பொது சிவில் சட்டம் என்ற கோட்பாட்டை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
2002 ஆம் ஆண்டு, நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. உறுப்பினர் ஒருவர் கொண்டுவந்த, பொது சிவில் சட்டம் என்ற மசோதாவை, அறிமுக நிலையிலேயே நாங்கள் எதிர்த்தோம். பனத்வாலா எதிர்த்தார். எனவே, மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது மந்திரி பிரமோத் மகாஜன் என்னிடம் வந்தார். வைகோ இந்த பிரச்சினையில் உங்கள் கொள்கை என்ன என்பது எங்களுக்கு தெரியும். நீங்கள் மசோதாவை எதிர்த்து வாக்கு அளிக்க வேண்டாம்; ஆதரித்தும் வாக்கு அளிக்க வேண்டாம். வாக்கு எடுப்பு நிகழ்கின்ற வேளையில், அவையில் இருந்து வெளியேறிவிடுங்கள் என்றார்.
நான் சொன்னேன்: மன்னிக்க வேண்டும். நாங்கள் இந்த மசோதாவை எதிர்த்து வாக்கு அளிப்போம் என்று கூறினேன். அதன்படியே எதிர்த்து வாக்கு அளித்தோம். பனத்வாலா எனக்கு நன்றி தெரிவித்ததோடு மட்டும் அல்ல, கவிக்கோ அப்துல் ரகுமானிடமும் இதைக் கூறி, வைகோ கொள்கையில் உறுதியானவர் என்று பாராட்டி இருக்கின்றார்.
ஆனால், அப்போது அதே கூட்டணியில் இருந்த தி.மு.க., அந்த மசோதாவை ஆதரித்து, பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக வாக்கு அளித்தது. பா.ஜ.க.வோடு கூட்டணி சேர்ந்ததற்காக எங்களைக் குறை சொல்லுகின்றீர்களே, நீங்கள் எந்த அடிப்படையில் தி.மு.க.வோடு கூட்டணி வைத்து இருக்கின்றீர்கள்?
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications