ராஜபக்சேவுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்திய வைகோ கைது- மோடி அரசின் முதல் கைது!
டெல்லி: நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வந்துள்ள இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக டெல்லியில் வைகோ தலைமையில் மதிமுகவினர் இன்று கறுப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களைப் போலீஸார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாடுகளின் தலைவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டனர். இதில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவும் ஒருவர். ஆனால் ராஜபக்சேவை அழைத்ததற்கு தமிழக அரசும் தமிழக அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சியான மதிமுக பொதுச்செயலர் வைகோ டெல்லி சென்று ராஜ்நாத்சிங், மோடியை நேரில் சந்தித்து ராஜபக்சேவை அழைப்பதை தவிர்க்க கோரினார். அப்படி இல்லையெனில் போராட்டம் நடத்துவோம் என்றும் வைகோ எச்சரித்தார்.
இந்நிலையில் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று கறுப்புக் கொடி ஏந்தி மதிமுகவினர் வைகோ தலைமையில் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மதிமுகவினர் கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டத்தின்போது ராஜபக்சேவைக் கண்டித்தும், ஈழப் படுகொலைகளைக் கண்டித்தும் வைகோ உள்ளிட்டோர் கோஷம் எழுப்பினர். போராட்டத்தில ஈடுபட்ட அனைவரையும் பின்னர் டெல்லி போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றி அப்புறப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications