மேகதாது அணை : கர்நாடகாவுக்கு ஒப்புதல் தர மறுக்கும் மத்திய அரசு.. நல்லதே நடக்கும்.. அண்ணாமலை பேச்சு
தஞ்சாவூர்: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடகா அரசின் செயலை கண்டித்து தமிழக பாஜக சார்பில் தஞ்சாவூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக பாஜக விவசாய அணி சார்பில் நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் எச் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
Recommended Video
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு ரூ 9 ஆயிரம் கோடியில் அணை கட்ட முயற்சிக்கிறது. இதற்கு தமிழ்நாடு அரசும் விவசாய அமைப்புகளும் நீண்ட காலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனாலும் அந்த திட்டத்தை கர்நாடகா அரசு கைவிடுவதாக இல்லை.
இதற்கு எதிராக தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கர்நாடகா முதல்வராக இருந்த எடியூரப்பா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தார்.

தமிழகத்தில் விவசாயம்
மேலும் காவிரியில் அணை கட்டினால் தமிழகத்தில் விவசாயம் பாதிக்கப்படும் என்பதால் அணை கட்டும் முடிவை கைவிடுமாறு ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் எடியூரப்பாவோ இது எங்கள் உரிமை, மேகதாது அணையை கட்டியே தீருவோம் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வயது மூப்பை கருத்தில் கொண்டு எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டார்.

பதவியேற்றதும் பொம்மை கொடுத்த பேட்டி
இவர் பதவியேற்றதும் கையுமாக ஒரு பேட்டி கொடுத்தார். அதில் காவிரியில் கூடுதலாக உள்ள நீரை சரியான முறையில் பயன்படுத்தவே மேகதாது அணை கட்டப்படுகிறது. எனவே அணை விவகாரத்தில் எங்கள் நிலைப்பாடு தெளிவானது. சட்டரீதியாக நாங்கள் சரியான பக்கத்தில்தான் உள்ளோம் என தெரிவித்திருந்தார்.

பாஜக தலைவர் அண்ணாமலை
இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற தமிழக பாஜக தலைவரும் கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில் , மேகதாது அணையை கட்ட கர்நாடகா ஒரு செங்கல்லை கூட வைக்க முடியாது. கர்நாடகா முதல்வரின் பேச்சு தவறானது. கர்நாடகா அரசின் முடிவை எதிர்த்தும் அதை கைவிடக் கோரியும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தஞ்சாவூரில் தமிழக பாஜக விவசாய அணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார்.

பசவராஜ் பொம்மை
இதுகுறித்து கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, அண்ணாமலை உண்ணாவிரதமாவது இருக்கட்டும். உணவு சாப்பிடட்டும். எனக்கென்ன. அண்ணாமலைக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது என்றார். இந்த நிலையில் தஞ்சாவூரில் பனகல் பில்டிங் அருகில் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர். எனினும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் எச் ராஜா, நாராயணன் திருப்பதி, பொன் ராதாகிருஷ்ணன், சிபி ராதாகிருஷ்ணன் தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.

ஆரம்பக் கட்டம்
கொரோனாவின் 3ஆவது அலையின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸார் அனுமதி கொடுக்கவில்லை. போலீஸார் அனுமதி மறுப்புக்கான காரணத்தையும் கடிதமாக தமிழக பாஜகவிடம் கொடுத்துள்ளனர். ஆனால் தடையையும் மீறி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். கர்நாடகா அரசின் செயல்பாட்டை கண்டித்து பாஜக மூத்த தலைவர்கள் பேசி வருகிறார்கள்.

கர்நாடகா எம்பி
இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பேசுகையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில் கர்நாடக எம்பி மேகதாது அணை திட்ட அறிக்கை ஒப்புதல் குறித்த கேட்ட கேள்விக்கு மத்திய நீர்வள அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறும்போது இந்த திட்ட அறிக்கைக்கு கடைமடை நிலை மாநிலங்கள், தமிழ்நாடு ஒப்புதல் இல்லாமல், காவிரி நீர் மேலாண்மை ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு ஒப்புதல் கொடுக்க இயலாது என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் மேகதாது அணை பிரச்சனை முற்றுக்கு வர உள்ளது நல்லதே நடக்கும் என்று தெரிவித்தார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications