சேது சமுத்திர திட்டம் மாதிரி தமிழீழ கோரிக்கையையும் கைவிடுவாரா வைகோ!?
சென்னை: தனித் தமிழீழ கோரிக்கையை ஒருபோதும் பாரதிய ஜனதா ஏற்றுக் கொள்ளவே கொள்ளாது என்று வைகோவின் முகத்தில் பளேர் என அடிவிட்டது போல சொல்லிவிட்டார் அக்கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு. ஆனால் தமிழகத்து பொட்டல் காடுகளில் மொட்டை வெயிலில் மத்தியில் மோடி ஆட்சி அமையும் போது "மாதம் மும்மாரி மழை பொயும்.. தமிழீழம் மலரும்" என்று வாய்சவடால் விட்டுக் கொண்டிருக்கிறார் மதிமுக பொதுச்செயலர் வைகோ.
திமுகவில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்ட பின்னர் அவர் மதிமுக என கட்சி தொடங்கிய காலம் முதல் தற்போது வரை அவருடன் இருந்த பலரது அரசியல் அத்தியாயமே முடிந்து போன கதையாகிவிட்டது. ஆனாலும் வைகோ மட்டும் இன்னமும் அந்த 1990ஆம் ஆண்டுகளின் முறுக்கை மட்டும் கைவிட்டுவிடவில்லை.தமது துண்டை இழுத்துவிடும் மேனரிசத்தைப் போல..
தமிழீழம் மலர்ந்தே தீரும் என்றுதான் கால் நூற்றாண்டு காலமாக மார்தட்டி பேசி வருகிறார். மறக்காமல் இதற்கும் கைதட்டி விசிலடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் மதிமுக தொண்டர்கள்.
இதுதான் வைகோ முழக்கம்
வைகோவைப் பொறுத்தவரையில் அவரது கட்சி தேர்தல் அறிக்கையில் மறக்காமல் இடம்பெறுவது தமிழீழத் தனியரசு, மாநில சுயாட்சி, சேது சமுத்திரம் திட்டம்.. வழக்கம்போல இந்தத் தேர்தல் அறிக்கையிலும் தனித் தமிழீழம், மாநில சுயாட்சிக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்க இந்திய ஐக்கிய நாடுகள் என பெயர் மாற்றம் இடம்பெற்றுள்ளன.
வெச்சா பாரதம்தான்
அதெப்படி இந்திய ஐக்கிய நாடுகள் என பெயர் மாற்றம் செய்வோம்... வைத்தால் "பாரதம்" என பெயர் மாற்றம் செய்வோம் என பதில் கொடுத்து புதிய பீதியைக் கிளப்பிவிட்டது பாரதிய ஜனதா.
சேதுசமுத்திர திட்டம்..
இதேபோல் சேதுக்கால்வாய் திட்டத்தின் நாயகனாக தம்மை பிரகடனப்படுத்திக் கொண்டு வலம் வந்த வைகோ, பாஜகவுக்கு பயந்து போய் 'சுற்றுச் சூழல் அச்சம்' என்ற கொள்ளிக்கட்டையால் தலையை சொரிந்து கொண்டு பேசி வருகிறார்.
தமிழீழம்
மேலும் தனித் தமிழீழம் என்ற வைகோவுக்கு விசில் சப்தங்களைப் பெற்றுத் தரக்கூடிய கர்ஜனைக்கும் பாஜக கல்லறை கட்ட சொல்லி வருகிறது. ஆனால், பாஜகவுக்கு இதுவரை வைகோ பதிலே சொல்லவில்லை.
சிவப்புக் கம்பளம் விரித்த பாஜக
இதே வைகோதான் மத்திய பிரதேசத்தில் பாஜகவால் சிவப்பு கம்பளம் கொடுத்து வரவேற்கப்பட்ட கொடுங்கோலன் ராஜபக்சேவை எதிர்க்கப் போய் சிறையேகிய கதையை சிலாகித்து பேசி சிங்கம் போல சீறி சீறிப் பேசிக் கொண்டிருந்தவர் வைகோ..
கூட்டணி...
ஆனால் அரசியலில் நீடித்தாக வேண்டும் என்றால் தேர்தலில் எதைச் செய்தாவது வெல்ல வேண்டும் என்பதற்காகத்தான் கூட்டணியே அமைக்கப்படுகிறது. அதைத்தான் அண்ணன் வைகோவும் செய்தார்.. செய்கிறார்.
விஜயகாந்த் எனும் அரசியல்வாதி..
வைகோ போன்றவர்கள் கொள்கையெல்லாம் பேசுவதை கைவிட்டுவிட்டு திராவிடத்தின் எதிரியான தேசியத்தை தமது கட்சிப் பெயரிலேயே வைத்துக் கொண்டு, ஒரே நேரத்தில் காங்கிரஸோடும் பாஜகவோடும் சமமாக கூட்டணி பேசிய "நேர்மையான" அரசியல்வாதி விஜயகாந்த் போல வேறு எதையாவது உளறிக் கொட்டலாமே .
அப்போதுதான் தாங்கள் பேசும் தனித் தமிழீழம், மாநில சுயாட்சி, இந்திய ஐக்கிய நாடுகள் போன்ற உயரிய லட்சியங்கள், கொள்கைகளுக்கு குந்தகம் ஏற்படாமல் இருக்கும்!!