
சிறுதாவூர் பங்களாவைப் பறித்த சசி கும்பலை எதிர்க்க சரியான ஆள் கங்கை அமரன்தான்- பாஜக கணக்கு
சென்னை: ஆசை ஆசையாக வாங்கிய சிறுதாவூர் பங்களாவை அடித்துப் பிடுங்கிய சசிகலா கும்பலை எதிர்த்து பாஜக வேட்பாளராக ஆர்.கே. நகரில் களமிறங்குகிறார் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன்.
டிடிவி தினகரனை தோற்கடிக்க கட்சி தனக்கு அளித்த மிக முக்கியமான வாய்ப்பாகவே கருதுகிறார் கங்கை அமரன். அமைதியான இடத்தில் ஓய்வெடுக்கவும், கதை எழுத பாட்டெழுத வாங்கிப் போடப்பட்ட பங்களாவை, 1991ல் ஜெயலலிதா முதல்வரானபோது சசிகலா கும்பல் அடித்துப் பிடிங்கினர் என்று கங்கை அமரன் குற்றம் சாட்டி வந்தார்.

இப்போது அதே சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த டிடிவி தினகரன் ஆர்.கே. நகரில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக, அதிமுக ஓபிஎஸ் அணியின் வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் பாஜக வேட்பாளராக கங்கை அமரன் பெயர் அறிவிக்கப்பட்ட உடன் இடைத்தேர்தல் களம் படு பரபரப்படைந்துள்ளது.
வேட்பாளர் பெயர்கள்
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு பி.ஜே.பி சார்பில் தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை செளந்தரராஜன், நடிகைகள் கெளதமி, காயத்ரி ரகுராம், இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகர் விஜயகுமார் போன்றவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. அதில், கங்கை அமரனின் பெயர் இறுதி செய்யப்பட்டது.
ஆசை ஆசையாக வாங்கிய சிறுதாவூர் பங்களாவை சசிகலா அபகரித்ததாக பகிரங்கமாகப் புகார் கூறியிருந்தார் கங்கை அமரன். இதனை மனதில்வைத்தே, சசி அணி சார்பில் நிற்கும் டி.டி.வி.தினகரனை வீழ்த்த அவரை களமிறக்கியுள்ளது.
சசிகலா மீதுள்ள வெறுப்பைக் காட்ட அந்தத் தொகுதி மக்கள், ஒரு மாற்று வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க முயல்வர். அத்துடன், ஒரு புதுமுகத்துக்கும் வாய்ப்பளிக்க முன் வருவார்கள் என்று கணக்கு போட்டே கங்கை அமரனை களமிறக்கியுள்ளது பாஜக.
இவர் கடந்த பல ஆண்டுகாலமாக திரை உலகில் இருக்கிறார். திரைப்பட இயக்குநர், பாடலாசிரியர், சன்டிவியில் கடந்த 5 ஆண்டுகாலமாக சன் சிங்கர் நடத்தி வருகிறார். இதனால் சிறு குழந்தைகளின் இதயங்களிலும் இடம்பிடித்தவர்.
தலித் சமூக வாக்குகள்
ஐந்து மாநில தேர்தல்களிலும் பாஜக மிகப்பெரிய வெற்றியை எட்டிப்பிடித்திருக்கிறது. தமிழகத்தில் பாஜகவிற்கு தற்போது ஆதரவு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காகவே ஆர்.கே. நகரில் கங்கை அமரனை நிறுத்தியுள்ளனர். வேட்பாளராக கங்கை அமரனை நிறுத்தியதன் மூலம் தலித் சமூகத்து வாக்கு வங்கியை பிரிக்கலாம் என்று கணக்கு போட்டே காய் நகர்த்தியுள்ளது பாஜக என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள். பாஜகவிற்கு டெபாசிட் கிடைத்தாலே அது மிகப்பெரிய சாதனைதான். ஆர்.கே. நகரில் தாமரைக்கு ஆதரவு கிடைக்குமா பார்க்கலாம்.