காஷ்மீர் வெள்ள நிவாரண நிதி.. கடை கடையாக வசூலில் இறங்கிய அமைச்சர்!
திருச்செந்தூர்: ஜம்மு காஷ்மீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக நிதி சேகரிக்கும் முயற்சியாக திருச்செந்தூரில் இன்று பாஜகவினர் நிதி வசூலில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவினர் நிதி சேகரித்தனர்.
காஷ்மீரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளையும்,உடமைகளையும்,உறவினர்கள் உள்ளிட்டோரை இழந்து அல்லல்படும் மக்களுக்கான நிவாரணத்திற்காக மக்கள் நிதியளிக்க பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து திருச்செந்தூர் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பாக பொது மக்களிடம் நிதி வசூல் செய்யப்பட்டது. நிவாரண நிதி வசூலை மத்திய கனரக தொழிற் துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள சிறு சிறு கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவைகளில் தானே நேரில் சென்று உண்டியல் ஏந்தி வசூல் செய்தார். பொதுமக்களிடமும் நிதி வசூல் செய்யப்பட்டது.
இந்த நிவாரண நிதி திரட்டலில் ஒன்றிய தலைவர் சிவ செந்தில் மாவட்ட துணைத் தலைவர்கள் செல்வராஜ், செந்தில்வேல், மாவட்ட வழக்கறிஞர் அணி பொதுச் செயலர் வக்கீல் கிரீஷ்குமார், ஒன்றிய துணைத் தலைவர் ஸ்ரீ கிருஷ்ணகுமார், நகரத் தலைவர் எஸ்.எஸ்.மணியன், ஒன்றிய செயலர் காளைச்சாமி, ஜனார்த்தனன், ராமேஸ்வரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications