அதிமுக மிரட்டலுக்குப் பயந்து விலகினாரா பாஜக வெள்ளையம்மாள்?
நெல்லை: நெல்லை மாநகராட்சி மேயர் இடைத் தேர்தலில் கடைசி நேரத்தில் பாஜக வேட்பாளர் வெள்ளையம்மாள் விலகியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால் அதிமுகவினரின் மிரட்டல் மற்றும் நெருக்கடி காரணமாகவே வெள்ளையம்மாள் போட்டியிலிருந்து விலகி விட்டதாக பாஜகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.
அவர் மட்டுமல்லாமல் அவரை முன்மொழிந்த பாஜக கவுன்சிலர் அழகுராஜுக்கும் அதிமுகவினர் மிரட்டல் விடுத்ததாக பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
முன்னதாக இந்த இருவரையும் அதிமுகவினர் கடத்தப் போவதாக ஒரு பரபரப்பு கிளம்பியது. இதையடுத்து இருவரும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வீட்டுக்குப் போய் தஞ்சமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில்தான் வெள்ளையம்மாள் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார். இதனால் அதிமுக வேட்பாளர் புவனேஸ்வரி போட்டியின்றி வென்று விட்டார்.
நேற்றுதான் பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆசியும் பெற்றிருந்தார் வெள்ளையம்மாள். ஆனால் இன்று தடாலடியாக அவர் போட்டியிலிருந்து வாபஸ் பெற்று பாஜகவினருக்கே திருநெல்வேலி அல்வாவைக் கொடுத்து விட்டார்.!