அதற்குள் என்ன அவசரம் உங்களுக்கு?.. பாமகவுக்கு டாக்டர் தமிழிசை கேள்வி
சென்னை: கூட்டணியில் இருக்கிறோமா இல்லையா என்பது தெரியாமலேயே முதல்வர் வேட்பாளரை அவசரம் அவசரமாக பாமக அறிவித்தது தவறு என்று பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று பாஜக சார்பில் நடந்த ஆசிரியர் தின விழாவில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இப்படித் தெரிவித்தார் தமிழிசை.
டாக்டர் தமிழிசையின் பேட்டியிலிருந்து..

இந்தி, சமஸ்கிருதம் என்றாலே பிரச்சினையா
தமிழகத்தில் இந்தி-சமஸ்கிருதத்தை பற்றி சொன்னாலே பிரச்சினையை உருவாக்குகிறார்கள். எதற்காக அது நடைமுறைபடுத்தப்படுகிறது? கட்டாயப்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து யாரும் யோசிப்பதில்லை. இதுபோன்ற சூழ்நிலை தமிழக அரசியலில் நடக்கிறது. இந்த அரசியல் மாற்றப்பட வேண்டும்.

உயிருக்கும் மேலான தாய்மொழி
தாய்மொழி நமக்கு உயிரினும் மேலானது. மற்ற மொழிகளை கற்பதை பரந்த மனப்பான்மையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்ற மொழிகளை ஏற்பதால், தாய்மொழிக்கு கீழான நிலையை ஏற்படுத்திவிடாது. மேலான நிலைதான் ஏற்படுத்தும்.

மொழியை வைத்து ஏன் அரசியல்
ஆராய்ச்சிக்காக, தொழிலுக்காக, பணிக்காக மற்ற மொழிகளை கற்பது அவசியமாகிறது. நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக கொண்டு வர வேண்டும் என்று கூட கோரிக்கையை வைத்திருக்கிறது. மொழியை வைத்து அரசியல் செய்வதை தமிழக அரசியல் கட்சிகள் நிறுத்தி கொள்ள வேண்டும். தமிழ்பற்று தமிழக அரசியல் தலைவர்களை விட, பாஜக தலைவர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது.

ஜல்லிக்கட்டு கொண்டாடப்படும்
ஜல்லிக்கட்டு விழா இந்த முறை கொண்டாடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம். அது ஒரு பண்பாடு சார்ந்த விழா என்று கோர்ட்டில் நாங்கள் கூறி இருக்கிறோம்.

டாஸ்மாக்கால் தொடரும் விபத்துகள்
விபத்துகளில் முதல் இடத்தில் தமிழகம் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் டாஸ்மாக் தான். அதை ஒழிக்க வேண்டும். டாஸ்மாக் கடையை மூடும் வரை தொடர்ந்து பாஜக மதுவை எதிர்த்து போராடும். நல்லது நடக்கும் போது பாராட்டுவோம். அதேசமயத்தில் மக்கள் பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம். வருகிற 17-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடிக்கு பிறந்தநாள். அதையொட்டி, தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை பாஜக சார்பில் நடத்த இருக்கிறோம்.

தேசிய ஜனநாயகக் கூட்ணியுடன்
பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியோடு தான் 2016 சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறது. சில கட்சிகள் கூட்டணியில் இருந்து சென்றுவிட்டார்கள். சிலர் தொடர்கிறார்கள். சில கட்சிகளும், அமைப்புகளும் கூட்டணிக்குள் வர இருக்கிறார்கள். 2016 தேர்தலில் பா.ஜ.க. மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும். ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சியை பலப்படுத்த பணியாற்றுகிறார்கள். கூட்டணி பற்றி உட்கார்ந்து பேசுவதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது.

அவசரப்பட்டு அறிவிப்பது தவறு
சில கட்சி அறிவிப்பதை போல தானாகவே கூட்டணியில் இருக்கிறோமா? இல்லையா? என்று தெரியாமலேயே முதல்வர் வேட்பாளரை அறிவித்தது தவறு. 2014-ல் அனைவரும் தேர்தல் சமயத்தில் ஒன்றாக சந்தித்தோம். பின்பு இருக்கிறோம், விலகிவிட்டோம் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. இன்னும் காலஅவகாசம் இருக்கிறது. அதற்குள் அரசியல் சூழலில் நிறைய மாற்றம் வரலாம். 2016 தேர்தல் மக்களுக்கான தேர்தலாக இருக்கும் என்றார் தமிழிசை.












Click it and Unblock the Notifications