ரூ.45 லட்சத்தை பறித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்த பாஜக மாநில நிர்வாகி.. வலைவீசி தூக்கிய போலீசார்!
சென்னை : சென்னை கொரட்டூரில் ரூபாய் 45 லட்சத்தை பறித்துச் சென்று பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் பாஜக மாநில நிர்வாகி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பெண் நாராயணி. இவர் கடந்த 10ஆம் தேதி சென்னை கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், "கொரட்டூரில் உள்ள தனது பூர்வீக சொத்தான 78 சென்ட் நிலத்தை விற்பதற்காக எனது நண்பரான சதீஷ் மற்றும் தரகர் பிரகாஷ்ராஜ் ஆகியோரை அணுகினேன்.
தொடர்ந்து, சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள நிலத்தை விற்பது தொடர்பாக சில சிக்கல்கள் இருந்ததால், அதை தீர்த்து வைத்து இடத்தை விற்று கொடுப்பதற்காக கமிஷன் அடிப்படையில் பாஜக நெசவாளர் பிரிவு மாநில செயலாளர் மின்ட் ரமேஷ் என்பவரை அணுகினேன்.

இந்நிலையில் வேறு ஒருவர் மூலம் ரூ.5 கோடிக்கு நிலம் விற்கப்பட்டதை தெரிந்து கொண்ட மின்ட் ரமேஷ், தனது கூட்டாளியான நாகர்கோவில் மகேஷ் என்பவருடன் வீட்டிற்கு வந்து என்னிடமிருந்த ரூபாய் 45 லட்சத்தை பறித்துச் சென்றார். மேலும் இது குறித்து போலீசாருக்கு புகார் தெரிவித்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்" என நாராயணி கோரியிருந்தார்.
அதேபோல் தரகர் பிரகாஷ்ராஜ் கடந்த 18ஆம் தேதி கொரட்டூர் போலீசில் புகார் கொடுத்தார். அதில் மின்ட் ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளியான நாகர்கோவில் மகேஷ் இருவரும் நேரில் வந்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியிருந்தார்.
இந்த 2 புகார்களின் பேரில், கொரட்டூர் போலீசார் தனித்தனியாக 2 வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் மின்ட் ரமேஷ் மற்றும் நாகர்கோவில் மகேஷை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பாஜக மாநில நிர்வாகி மின்ட் ரமேஷ், வட சென்னை பகுதியில் பிரபல ரவுடி ஆவார். இவர் மீது வட சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications