மக்கள் பிரச்சினை பற்றி பேசாமல் ஆட்சியை கலைக்க பேசுகிறார் ஸ்டாலின் - தமிழிசை
தமிழக சட்டசபையில் மக்கள் பிரச்சினை பற்றி பேசாமல் ஆட்சியை கலைப்பது பற்றி ஸ்டாலின் பேசுகிறார் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
சென்னை: எப்போது பார்த்தாலும் ஆட்சியை கலைங்க... ஆட்சியை கலைங்க என்றுதான் ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால் மக்கள் பிரச்சினை பற்றி ஸ்டாலின் சட்டசபையில் பேசுவதில்லை என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், சட்டசபையில் ஆளுங்கட்சியும், எதிர்கட்சியினரும் ஆக்கப்பூர்வமாக செயல்படுவதில்லை என்றார்.

கையில் ஒரு சிடியை வைத்துக்கொண்டு எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் ஆதாரம் இருந்தால் ஒத்துக்கொள்ள வேண்டியதுதான், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான் ஆனால் மக்கள் பிரச்சினை பற்றி பேசாமல் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று ஆட்சியை கலைக்க வேண்டும் என்று மட்டும் சொல்வது ஏன்?.
சட்டசபையில் பேச மக்கள் பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கிறதே. அதைப்பற்றி ஆளுங்கட்சியும் கவலைப்படவில்லை, எதிர்கட்சியினரும் கவலைப்படுவதில்லை.
காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர், பாஜகவைப் பற்றி பேசுவதையும், கவலைப்படுவதையும் விட்டு விட்டு அவருடைய கட்சியைப் பற்றி மட்டும் கவலைப்பட வேண்டும் என்றும் தமிழிசை சவுந்தராஜன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications