கோவை: டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் - வானதி சீனிவாசன் கைது
கோவை: டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி போராட்டம் நடத்தி பூட்டு போட முயன்ற பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினரை கோவையில் போலீசார் கைது செய்தனர்.
கோவை சல்லிவன் வீதியில் காமாட்சியம்மன் கோவில் அருகே உள்ள மதுக்கடையை மூடக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய வானதி சீனிவாசன், வருமானம் இல்லாத டாஸ்மாக் கடைகளை மூடுவதால் மக்களுக்கு பயனில்லை என்றார். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், பள்ளிகள், கோவில்களுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை மூடவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கையில் சங்கிலி, பூட்டுடன் பாஜக தொண்டர்கள் குவிந்தத்தை அடுத்து டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 140 பேரும் கைது செய்யப்பட்டனர்.