ஓபிஎஸை ஓரங்கட்டுகிறதா பாஜக?
உள்ளாட்சி தேர்தலில் பாஜக சொந்த பலத்தில் களம் காணும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரை: உள்ளாட்சி தேர்தலில் பாஜக சொந்த பலத்தில் களம் காணும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதேபோல் யாருடைய கூட்டணியையும் எதிர்ப்பார்த்து பாஜக இல்லை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி குறித்து உள்ளாட்சி தேர்தல் அறிவித்தப் பின் அறிவிக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த நிலையில் பாஜக தலைவர்கள் இவ்வாறு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலாவின் அரசியல் பிரவேசத்துக்குப் பிறகு அதிமுகவில் இருந்து பிரிந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அவரை பாஜக பின்னால் இருந்து இயக்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மோடியை சந்தித்த ஓபிஎஸ்
அண்மையில் டெல்லி சென்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது குடியரசு தலைவர் தேர்தலில் ஓபிஎஸ் அணி பிரதமர் மோடிக்கு ஆதரவு அளித்ததாக தகவல்கள் வெளியாயின.
ஓபிஎஸின் டிவிட்
நேற்று ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவித்த பிறகு பாஜகவுடன் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இதன்மூலம் ஓபிஎஸை பாஜகதான் பின்னிருந்து இயக்குகிறது என்பது உறுதியாகியுள்ளது என கூறப்பட்டது.
சொந்த பலத்தில் களம் காணும்
இந்நிலையில் மதுரையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது உள்ளாட்சி தேர்தலில் பாஜக சொந்த பலத்தில் களம் காணும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததார்.
யாருடைய கூட்டணியையும்..
இதனிடையே திருப்பூரில் செய்தியாளர்களிடத் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழகத்தில் பாஜக கூட்டணி வைப்பது குறித்து தற்போது பேசவில்லை என்றார். தமிழகத்தில் பாஜக யாருடைய கூட்டணியும் எதிர்ப்பார்த்து இல்லை என்றும் அவர் கூறினார்.
ஓபிஎஸை ஓரம் கட்டுகிறதா?
பாஜக தனது பலத்தை நிரூபிக்கவே முயற்சி செய்து வருகிறது என்றும் அவர் கூறினார். பாஜகவுடன் கூட்டணி குறித்து உள்ளாட்சி தேர்தல் அறிவித்தப் பின் அறிவிக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த நிலையில் பாஜக தலைவர்கள் இவ்வாறு தெரிவித்திருப்பது பாஜக ஓபிஎஸ் அணியை ஓரம் கட்டுகிறதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.