திமுக - அதிமுக பின்னடைவுக்கு நடுவே புகுந்து லாபம் பெறப் பார்ப்போம்- எச்.ராஜா
காரைக்குடி: பெரும் ஊழல் புகார்களால் தமிழகத்தின் இரண்டு பிரதான கட்சிகளான திமுக, அதிமுக இடையே பிளவு காணப்படுகிறது. இதைப் பயன்படுத்தி உள்ளே புகுந்து நாங்கள் லாபம் பெறப் பார்ப்போம் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கூறியுள்ளார்.
எச். ராஜா பிறந்த நாள் நிகழ்ச்சி காரைக்குடியில் நடந்தது. அதில் கலந்து கொண்டு ராஜா பேசுகையில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை என்பது நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தண்டனை. அது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால் அதை காரணமாக வைத்து தமிழகத்தில அ.தி.மு.க.வினர் வன்முறையில் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

காவல்துறை தமிழகத்தில் மெத்தனமாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் இருக்கும் இரண்டு பிரதான திராவிட கட்சிகளின் தலைவர்களே ஊழல் புகார்களில் சிக்கியுள்ளனர். வேறு எந்த மாநிலத்திலும் தலைவர்கள் இப்படி புகாரில் சிக்கியது இல்லை.
அதே போல் இந்த ஊழல் புகார்கள் காரணமாக தமிழகத்தில் இரண்டு திராவிட கட்சிகளுக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளன. இந்த பின்னடைவு வாய்ப்பை வரும் தேர்தலில் பா.ஜ.க பயன்படுத்தி கொள்ளும்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலிலே எங்களுடைய வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வினர் நடத்திய விதிமீறல்களை மீறிதான் பா.ஜ.க வாக்குகளை கணிசமாக வாங்கியுள்ளது. ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க வைத்து, அதன் மூலம் பா.ஜ.க.வை தமிழகத்தில் வளர்க்க பார்ப்பதாக கூறுவது உண்மையற்றதன்மை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications