கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி பாஜக வெற்றி பெறும்: பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை: கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் வரும் மே 16 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் நிறுவனம் இணைந்து கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. அதன் முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டன.
தமிழகத்தில் அதிமுக 130 இடங்களையும், திமுக 70 தொகுதிகளையும், பிற கட்சிகள் 34 இடங்களை கைப்பற்றும் என்று கூறியது அந்த கருத்துக்கணிப்பு. மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் பாஜகவுக்கு எந்த தொகுதிகளிலும் வெற்றி கிடைக்க வாய்ப்பில்லை எனவும் கருத்துக்கணிப்பு முடிவில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கருத்துக் கணிப்புகளை பொய்யாகிபோனது. அதேபோல நிலைதான் தற்போது நடக்க வாய்ப்புகள் உண்டு.
அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுக்கும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் கிடையாது. கருத்துக் கணிப்புகள் தவறானதாக நான் கருதுகிறேன். கருத்து கணிப்புகளை பொய்யாக்கி தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்றார்.