புதுக்கோட்டை அருகே பாஜக மகளிர் அணி தலைவியின் கணவர் கத்தியால் குத்தி படுகொலை
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட பாஜக மகளிர் அணி தலைவியின் கணவர் கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞரை விராலிமலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே ராஜாளிப்பட்டியை சேர்ந்தவர் 80 வயதாகும் ரெங்கசாமி கவுண்டர் என்பவருடைய மகன்கள் வேலு (56), சாமிக்கண்ணு (52). வேலு மணப்பாறை அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார்.

சாமிக்கண்ணு விராலிமலை அருகே உள்ள விருதாபட்டி கிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். ரெங்கசாமி கவுண்டரின் மகன்களுக்கிடையே சொத்து சம்பந்தமாக நீண்டகாலமாக பிரச்சினை இருந்து வந்திருக்கிறது.
இந்நிலையில் நேற்று சாமிக்கண்ணு மகன் சதீஸ்குமார் (25) ராஜாளிப்பட்டியில் உள்ள தனது பெரியப்பா வேலுவின் வீட்டிற்கு சென்று சொத்து சம்பந்தமாக பேசினாராம். அப்போது சொத்து குறித்து இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சதீஸ்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வேலுவின் வயிற்றில் ஆவேசமாக குத்தி உள்ளார். மேலும் அருகில் கிடந்த கல்லை தூக்கி வேலுவின் நெஞ்சில் போட்டுவிட்டு ஓடினார். அப்போது அங்குவந்த ரெங்கசாமி கவுண்டரையும் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து சதீஸ்குமார் தப்பியோடினார்.
இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த வேலு மற்று ரெங்கசாமி கவுண்டர் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தார்கள். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வேலு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். படுகாயமடைந்த ரெங்கசாமி கவுண்டரை மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த படுகொலை குறித்து தகவல் அறிந்த வந்த விராலிமலை போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சதீஷ்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர். வேலுவின் மனைவி திருப்பதி என்பவர் புதுக்கோட்டை மாவட்ட பா.ஜனதா மகளிரணி தலைவியாக இருக்கிறார். சதீஷ்குமார் எங்கு இருக்கிறார் என்று உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள். விரைவில் கைதாகுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுக்கோட்டை மாவட்ட பாஜக மகளிர் அணி தலைவியின் கணவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications