பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்ட முயற்சி- திருநாவுக்கரசர் உட்பட 300 காங்கிரசார் கைது
சென்னை: சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்டியதாக அக்கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் உட்பட 300 காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதால் 25 காங்கிரஸ் எம்.பி.க்கள் 5 நாட்களுக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த சஸ்பென்ட் உத்தரவுக்கு எதிராக டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தலைமையில் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனிடையே எம்.பி.க்கள் சஸ்பென்ட் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன் அறிவித்திருந்தார்.
இதன்படி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகே இன்று காலை நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கருப்புக் கொடியுடன் கூடினர். அப்போது பேசிய இளங்கோவன், காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதன் பின்னர் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்ட ஊர்வலமாக செல்ல முயன்ற அக்கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் உட்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications