எரிமலை போல குபுகுபுவென வெளியேறும் சென்னை சில்க்ஸ் புகை!
சென்னை சில்க்ஸ் கடையின் ஒரு பகுதி வேகமாக இடிக்கப்பட்டுள்ளதால் எரிமலை குழம்பு போல கரும்புகை வெளியேறி வருகிறது.
சென்னை: எரிமலை குழம்பு போல் குபுகுபுவென சென்னை சில்க்ஸில் இருந்து கரும்புகை வெளியேறி வருகிறது.
தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்பட்ட இக்கடையில் இருந்து 15-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடம் விரைந்து தீயை அணைக்க 12 மணிநேரமாக போராடி வருகின்றனர். 15 தீயணைப்பு வாகனங்கள் வரழைக்கப்பட்டுள்ளன. தரை தளத்தில் தீ அணைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மற்ற தளங்களில் பற்றியுள்ள தீயை எவ்வாறு அணைப்பது என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடையின் ஒரு பகுதி இடிக்கப்பட்டுள்ளதால் கரும்புகையானது வேக வேகமாக எரிமலை குழம்பு போல் வெளியேறி வருகிறது. இதனால் தி.நகரே புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. கண்ணாடி சிதறல்களுடன் புகை வெளியேறுகிறது.