நடுக்கடலில் கம்ப்ரசர் வெடித்து 2 மீனவர்கள் படுகாயம்- படகு கடலில் மூழ்கியது.
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே நடுக்கடலில் படகில் கம்ப்ரசர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் இரண்டு மீனவர்கள் படுகாயமடைந்தனர். இதில் அந்த நாட்டுப் படகு கடலில் மூழ்கியது.
தூத்துக்குடி மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மைதீன் இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் இன்று அதிகாலை மீன்பிடிக்க 8 மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இவர்கள் சென்ற நாட்டுப்படகில் ஏர் கம்ப்ரசர் மூலம் சங்கு குளிக்க சென்றனர். இவர்கள் சென்ற நாட்டுப்படகு தூத்துக்குடி சங்குகுளி துறைமுகத்தில் இருந்து 5 கடல்மைல் தொலைவில் சென்றபோது எதிர்பாராதவிதமாக ஏர் கம்ப்ரசர் வெடித்ததில் நாட்டுப்படகு கடலில் மூழ்கியது. இதில் தூத்துக்குடி மேட்டுப்பட்டியை சேர்ந்த முருகன் மற்றும் ராஜா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
கடலில் தத்தளித்து கொண்டிருந்த மீனவர்கள் 8 பேரையும் அப்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் அவர்களை மீட்டனர். இதனையடுத்து படுகாயம் அடைந்த மீனவர்கள் ராஜா மற்றும் முருகன் ஆகியோரை தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications