குற்றாலம் ஐந்தருவி பகுதியில் சாரல் மழை...இன்று முதல் படகு சவாரி துவக்கம் !
தென்காசி: குற்றாலம் ஐந்தருவி பகுதிகளில் நேற்று சாரல் மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இன்று முதல் படகு சவாரி துவங்கப்பட உள்ளது.
தமிழக கேரளா எல்லையான மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தென்மேற்கு பருவமழையின் காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலமாகும்.இந்த சீசன் நேரத்தில் அருவிகளின் நகரமான குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் ஆனந்த குளியல் நடத்த லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான செங்கோட்டை, புளியரை, குண்டாறு, மேக்கரை, குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை இல்லாததால் குற்றாலம் மெயின் மற்றும் ஐந்தருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்த நிலையில் நேற்று காலை முதல் லேசான சாரல் மழை பெய்தது. விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப்பி பயணிகளின் கூட்டம் அருவிக்கரையில் அதிகரித்து காணப்படுகிறது.
படகு சவாரி:
ஐந்தருவி செல்லும் வழியில் உள்ள வெண்ணமடை குளத்தில் படகு குழாமுக்கு போதிய தண்ணீர் இல்லாததால் படகு போக்குவரத்து தொடங்கப்படாமல் இருந்து வந்தது. தற்போது ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் படகு இன்று முதல் படகு சவாரி துவங்கப்பட உள்ளது.
தற்போது இங்கு 31 படகுகள் தயார் நிலையில் உள்ளன. இதில் இரண்டு இருக்கை பெடல் படகுகள், நான்கு இருக்கை பெடல் படகுகள், நான்கு இருக்கை துடுப்பு படகுகள், தனிநபர் துடுப்பு படகுகள் ஆகியவை உள்ளது.