விருத்தாசலத்தில் அரசு பள்ளி அருகே குண்டுவெடிப்பு: மக்கள் பீதி
கடலூர்: விருத்தாசலத்தில் அரசு பள்ளி அருகே குண்டு வெடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் இருக்கும் திருவள்ளுவர் நகர் 10வது குறுக்கு தெருவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. அதற்கு அருகில் அதே பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் ஆதிவராகவனுக்கு சொந்தமான வெற்றிடத்தில் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் உள்ள குப்பையை இன்று காலை 6.45 மணிக்கு பன்றி ஒன்று கிளறியபோது அங்கு பதுக்கி வைக்கப்பட்ட வெடிபொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதில் பன்றி உடல் சிதறி இறந்தது. வெடிபொருள் வெடித்த சத்தம் சுமார் 1 கிமீ தூரம் வரை கேட்டது. சத்தம் கேட்டு மக்கள் அந்த இடத்தில் கூடிவிட்டனர். அப்போது குப்பை மேட்டில் இருந்து புகை வந்ததை பார்த்த மக்கள் உடனடியாக இது குறித்து விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். யாராவது குப்பை மேட்டில் வெடிகுண்டை பதுக்கி வைத்திருக்கலாம் அதை பன்றி கிளறியபோது வெடித்துள்ளது என்று கருதப்படுகிறது. அந்த இடத்தில் மேலும் ஏதாவது குண்டுகள் உள்ளதா என்பதை கண்டறிய வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
வெடிபொருள் வெடித்தபோது அந்த வழியாக யாரும் செல்லவில்லை என்பதாலும், பள்ளி திறக்கும் நேரம் இல்லை என்பதாலும் உயிர் சேதம் எதுவும் இல்லை.












Click it and Unblock the Notifications