மதுரையில் மீண்டும் தலைதூக்கும் வெடிகுண்டு பீதி!
கோவில் நகரமான மதுரையில் கொலை, வெட்டு குத்து சம்பவங்கள் எந்த அளவிற்கு அதிகமோ அதே அளவிற்கு அடிக்கடி வெடிகுண்டுகளும் கண்டெடுக்கப்படுகின்றன.
கடந்த சில மாதங்களாக மதுரையில் அமுங்கிக்கிடந்த வெடிகுண்டு கண்டெடுப்பு சம்பவம், தற்போது மீண்டும் தலை தூக்கியுள்ளது. ஒரே நேரத்தில் 11 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
மதுரை அண்ணா நகரில் செண்பகம் மருத்துவமனை அருகில் மாநகராட்சி குப்பை தொட்டியில் நாட்டு வெடிகுண்டுகள் கிடப்பதாக போலீசுக்கு நேற்று தகவல் வந்ததையடுத்து, வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மிக ஜாக்கிரதையாக அந்த பகுதியில் போக்குவரத்தை நிறுத்தி குப்பை தொட்டியை சோதனையிட்டனர். அதில் 11 நாட்டு வெடிகுண்டுகள் எடுக்கப்பட்டன.

மாநகரின் முக்கியமான அந்த பகுதிக்கு இத்தனை நாட்டு வெடிகுண்டுகள் எப்படி வந்தன என்று துணை போலீஸ் கமிஷனர் சமந்த் ரோஹன் தலைமையில், காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ள நிலையில், சில ஆண்டுகளாகவே மதுரை நகரிலும், புறநகரிலும் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் சில வெடிக்கவும் செய்தன. இதன் பின்னணியில் பயங்கரவாதிகள் சிலர் இருந்தது தெரிந்தது. ஆனாலும் அதிகாரப்பூர்வமாக போலீஸ் தரப்பில் குற்றவாளிகள் குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை.
மதுரையில் கடந்த சில மாதங்களாக இல்லாமலிருந்த வெடிகுண்டு கண்டெடுக்கும் நிகழ்வுகள், மீண்டும் மதுரையில் அரங்கேறி இருப்பது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையும் வெடிகுண்டுகளும்
மதுரையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, பி.ஜே.பி. தலைவர் அத்வானி செல்கின்ற பாதையில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டதாகச் சிலரை கைது செய்தது போலீஸ். அதன் பிறகு 10 வெடிகுண்டு சம்பவங்கள் அரங்கேறிவிட்டன.
டைம்பாம்
2011 ஏப்ரல்30ஆம் தேதி மாட்டுத்தாவணி டாஸ்மாக் கடையில் பேட்டரி குண்டு வெடித்தது. செப்டம்பர் 30ல் புதுார் பஸ் டெப்போவில் டைம் பாம் கண்டெடுக்கப்பட்டது.
பைப் வெடிகுண்டுகள்
2011 அக்டோபர் 28ல் திருமங்கலம் ஆலம்பட்டி தரைபாலத்தின் கீழ் பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி வரவிருந்த பாதையில் சக்திவாய்ந்த பைப் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
டிசம்பல் 7ல் திருவாதவூர் சென்ற அரசு பேருந்தில் இருந்து டிபன்பாக்ஸ் வடிவிலான டைம்பாம் கண்டெடுக்கப்பட்டது.
சைக்கில் பாம்
2012ல் மே 1ம் தேதி, அண்ணாநகர் ராமர் கோவில் வெளியே சைக்கிள் பாக்சில் டைம்பாம் வெடித்தது. அதே ஆண்டு ஆகஸ்ட் 4ல் தெற்கு கிருஷ்ணன் கோவில் தெருவில் உமர்பாரூக் என்பவருக்கு டைம்பாம் பார்சல் வந்தது. நவம்பர் 2ல் திருப்பரங்குன்றம் மலையில் டைம்பாம் உதிரிபாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
பைப் குண்டு
2013 டிசம்பர் 5ல், அனுப்பானடி ரோட்டில் பெட்ரோல் குண்டு வீசி முத்துவிஜயன் என்பவர் கொல்லப்பட்டார். கடந்த பிப்ரவரி 11ல், உத்தங்குடி தனியார் வணிகவளாகத்தில் இரும்பு பைப் குண்டு, கண்டெடுக்கப்பட்டது. அது வெடித்திருந்தால் அரை கிலோ மீட்டர் தூரத்துக்குப் பாதிப்பு இருந்திருக்கும் என்றும் சொல்லப்பட்டது.
வெடித்த குண்டு
பிப்ரவரி 15-ம் தேதி மாலை ஆறு மணியளவில் கீழவாசல் வெங்காய மார்க்கெட் பகுதியில், மர்மப் பை ஒன்றைப் பார்த்த ஆட்டோக்காரர்கள் சந்தேகத்துடன் திறந்து பார்த்தபோது வெடிகுண்டுப் பொருட்கள் இருப்பதைப் பார்த்துப் பதறினர். அந்தப் பையில் ஒரு சோப் டப்பா, 150 கிராம் அளவில் சணல் உருண்டை, ஒயருடன் இணைக்கப்பட்ட டைமர், அரை லிட்டர் கேனில் பெட்ரோல், நான்கு சிறிய பேட்டரிகள் இருந்தன.
11 நாட்டு வெடிகுண்டுகள்
இந்த நிலையில், மதுரை அண்ணாநகர் பகுதி வைகை காலனியில் வசிக்கும் 33-வது வார்டு செயலாளர் தி.மு.க. பிரமுகர் மருதுபாண்டி என்பவரின் வீட்டு வாசலில் பெட்ரோல் பாம் ஒன்று கடந்த பிப்ரவரி 17-ம் தேதி கண்டெடுக்கப்பட்டது. ஆனால், வெடிக்கவில்லை. இது உட்கட்சிப் பிரச்னையால் நிகழ்த்தப்பட்டதா, அல்லது வேறு ஏதும் பின்னணியா என்று அப்போது போலீஸ் தலையைப் பிய்த்துக்கொண்டனர். கடந்த மார்ச் 14ல், நெல்பேட்டை சுங்கம்பள்ளிவாசல் அருகே குண்டுவெடித்தது. அந்த வரிசையில் தற்போது 11 நாட்டு வெடிகுண்டுகள் சேர்ந்து உள்ளன.
டம்மிபீஸாம்
இதற்கிடையே, கண்டெடுக்கப்பட்டவை நாட்டு வெடிகுண்டுகள் அல்ல. அது தீபாவளிக்கு வெடிக்கும் வெங்காய வெடி போன்றவைஎன, போலீசார் தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், ''எறிந்தால் வெடிக்கும் வகையில் கரிமருந்து, திரி மற்றும் கூழாங்கற்களை கொண்டு அவை தயாரிக்கப்பட்டு உள்ளன. இது உயிர்சேதத்தை ஏற்படுத்தாது. இது வெறும் 'டம்மி பீஸ்' என்றனர். இதை போலீஸ் கமிஷனர் அலுவலகமும் உறுதி செய்தது.
கண்காணிப்பு தேவை
டம்மியோ ஒரிஜினலோ போலீசின் சுறுசுறுப்பை ஆழம்பார்க்கவே இதுபோன்ற சமுக விரோத செயல்கள் மதுரையில் அரங்கேறுவதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். காவல் துறையினர் முழு மூச்சோடு களம் இறங்கி, இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கையாகும்.












Click it and Unblock the Notifications