போஸ் எம்.எல்.ஏ. வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்கள் மீது ஒரு மாதம் கழித்து வழக்கு
மதுரை: மதுரை வடக்கு சட்டசபை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. போஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் மீது தற்போது தான் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுரை வடக்கு தொகுதி அதிமுக சட்ட மன்ற உறுப்பினராக இருப்பவர் போஸ். கடந்த அக்டோபர் மாதம் 28ம் தேதி அன்று மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய ஆய்வாளர் பெத்துராஜுக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் போலீஸ் பக்ருதீன் தம்பிமார்கள், நெல்பேட்டை, மதுரை என்ற முகவரியிட்டு, அதிமுக எம்.எல்.ஏ. போஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக போஸ் வீடு உள்ள ஜீவா நகர் 2வது தெருவில் அவரது வீட்டிற்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆனால் இந்த மிரட்டல் குறித்து போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய சட்ட நிபுணரின் ஆலோசனையை கேட்டனர். இதனையடுத்து போஸ் வீட்டிற்கு அடையாளம் தெரியாத நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.