கோவை: மது போதையில் பெண் போலீசை தாக்கிய ”குடிமகன்” கைது
கோவை: குடிபோதையில் பெண் காவலரைத் தாக்கியதாக கோவையில் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
கோவை மேற்கு போக்குவரத்து காவல்நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணியாற்றி வரும் சத்யா (36), நேற்று ஒப்பணக்கார வீதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது மது போதையில் அவ்வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி தவறான வழியில் செல்லும் படி ரகளை செய்திருக்கிறார் ஒருவர். ஆனால், அதனை மதியாமல் தாண்டிச் செல்ல முயன்ற ஆட்டோ ஒன்றை வழி மறித்த அந்நபர், அந்த ஆட்டோவின் கண்ணாடியை உடைக்க முயற்சித்துள்ளார். இதனைக் கண்ட சத்யா விரைந்து சென்று அதனை தடுக்க முயற்சித்துள்ளார்.
ஆனால், மது போதையில் இருந்த அந்நபர் சத்யாவைத் கீழே பிடித்து தள்ளி அவரை தாக்கியுள்ளார். உடனடியாக இதுகுறித்து உக்கடம் போலீஸாருக்கு சத்யா தகவல் அளித்தார். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பெண் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட நபரைக் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தடாகம் சாலையைச் சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் வீரபாண்டி என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், வீரபாண்டி மீது, கொலை மிரட்டல், அரசு ஊழியரை தாக்கி பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைச் சிறையில் அடைத்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த பெண் போலிஸ் சத்யா கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.