ஓபிஎஸ் - டிடிவி தினகரன் இருவரில் யார் துரோகி கேட்கிறார் நடிகை குஷ்பு
ஓ.பன்னீர் செல்வமும், டி.டி.வி. தினகரனும் போயஸ் கார்டனை கைப்பற்றவே குறியாய் இருக்கிறார்கள் இவர்கள் இருவரில் யார் துரோகி நடிகை குஷ்பு கேட்டுள்ளார்.
சென்னை: ஓ.பன்னீர் செல்வமும் டிடிவி தினகரனும் பொது மக்களுக்கு துரோகம் செய்து இருக்கிறார்கள் என்று நடிகை குஷ்பு குற்றம் சாட்டியுள்ளார். இருவருமே போயஸ் கார்டனை கைப்பற்றவே குறியாய் இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே. நகரில் வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பிரச்சாரம் செய்ய வரும் ஓபிஎஸ்ஸை பார்த்து 'துரோகியே ஒழிக, துரோகியே ஒழிக என தினகரன் ஆதரவாளர்கள் சத்தம் போடுகின்றனர்.
ஓபிஎஸ் ஆதரவாளர்களோ, அம்மாவை கொன்ற கொலைகார கும்பலே ஒழிக என்று பதிலுக்கு முழக்கமிடுகின்றனர்.
குஷ்பு பேச்சு
தண்டையார்பேட்டையில் திமுக வேட்பாளரை ஆதரித்து நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு பேசினார். அப்போது அவர்,
ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க மத்திய போலீஸ் படையை தீவிரப்படுத்துகிறது தேர்தல் ஆணையம். அப்படியென்றால் கருப்பு பணத்தை பிரதமர் மோடி எப்படி ஒழித்ததாக கூற முடியும் என்று கேட்டார். உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. பணம் கொடுத்து தான் வெற்றி பெற்றதா என்றும் கேள்வி எழுப்பினார்.
இரு அணிகளின் மோதல்
தேர்தல் பிரசாரம் என்றால் எப்போதும் எதி கட்சிகள் மீதுதான் குற்றச்சாட்டுகள் வைக்கப்படும். ஆனால் இந்த தேர்தலில் அதிமுகவில் இரு அணிகளாக ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் இடையேதான் மோதல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்துக் கொள்கிறார்கள்.
யார் துரோகி
இருவருமே துரோகிகள் என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையிலேயே 2 பேரும் பொது மக்களுக்குத் தான் துரோகம் செய்து இருக்கிறார்கள்.
எனக்கு வாய்ப்பு அளித்தால் நல்லது நடக்கும் என்று டி.டி.வி. தினகரன் கூறுகிறார். 57 ஆயிரம் வீடுகள் கட்டித் தருவதாக வாக்குறுதி கொடுக்கிறார். தமிழக பட்ஜெட்டில் கடன் சுமை அதிகரித்திருப்பதாக கூறுகிறார்கள். இந்த சூழ்நிலையில் எப்படி வீடுகட்டி கொடுக்க முடியும்? அதற்கு எப்படி வருமானம் கிடைக்கும். இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
போயஸ்கார்டன் வீடு
ஓ.பன்னீர் செல்வமும், டி.டி.வி. தினகரனும் போயஸ் கார்டனை கைப்பற்றவே குறியாய் இருக்கிறார்கள். இரட்டை இலை சின்னம் கேட்டு டெல்லி செல்லக்கூடிய அ.தி.மு.க.வினர் விவசாயிகள் பிரச்சினைகளை கொண்டு செல்லவில்லை. 20 நாட்களாக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை பிரதமர் மோடி இதுவரை சந்திக்கவில்லை. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று விவசாயிகளை சந்திக்காமல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நன்மை செய்யும் கட்சிகள்
இந்த தேர்தலில் தி.மு.க.வை வெற்றி பெறச் செய்தால் பல்வேறு நலத் திட்டங்களை செய்து கொடுக்கும். மத்தியில் பல நல்ல திட்டங்களை காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்தது. மக்களுக்கு நன்மை செய்யும் கட்சி காங்கிரசும், தி.மு.க.வும் தான். இன்னும் 6 மாதத்தில் தமிழகத்தில் பொதுத் தேர்தல் வரும். மக்கள் ஆட்சியாளர்கள் மீது கோபத்தில் இருக்கிறார்கள். தமிழகத்தில் காசு கொடுத்து குடிநீர் வாங்கும் அவலநிலை உள்ளது. ஆனால் டாஸ்மாக்கை மூடக்கூடாது என உச்சநீதிமன்றம் வரை சென்று மனு போடுகிறார்கள் என்று குஷ்பு கூறியுள்ளார்.