நானும் அண்ணன் வைகோவும் சிங்கங்கள்... விஜயகாந்த்
மதுரை: பாஜக அணியின் நானும் அண்ணன் வைகோவும் இரண்டு சிங்கங்களாக இணைந்துள்ளோம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் மதிமுக தலைவர் வைகோவை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருமங்கலத்தில் நேற்று பிரசாரம் செய்தார், அப்போது அவர் பேசியதாவது
நானும், வைகோவும் ஜாதி, மதத்துக்கு அப்பாற்றப்பட்டவர்கள். பாஜக கூட்டணி வெற்றி கூட்டணி. இந்த கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் மோடி பிரதமராவார். அவர் பிரதமர் ஆக விருதுநகர் தொகுதியில் அண்ணன் வைகோ வெற்றி பெற வேண்டும்.
இவர் ஏற்கனவே தொகுதிக்கு அதிகம் செய்துள்ளார். முன்னாள் பிரதமர்கள் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோரை எதிர்த்து நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டுள்ளார். உங்களுக்காக நிச்சயம் பேசுவார்.

உத்தரவாதம் இல்லை
தற்போது மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, இதனால் விவசாயமும் இல்லை. இது சம்பந்தமாக முதல்வர் ஜெயலலிதா உத்தரவாதம் எதுவும் தரமாட்டார்.

சொத்துக்குவித்த ஜெ
அவர் முதல்முதலாக ஆட்சிக்கு வந்தபோது சொத்து மதிப்பு 2 கோடிதான். ஆனால் அவருக்கு 64 கோடி சொத்து உள்ளது. ஒரு ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறிய அவரிடம் கோடிக்கணக்கான சொத்துகள் எப்படி?

டாஸ்மாக்தான் சாதனை
அதிமுக ஆட்சியில் ஒரே சாதனை டாஸ்மாக். எதற்கு எடுத்தாலும் அம்மா பெயர் வைக்கும் ஜெயலலிதா டாஸ்மாக் கடைக்கு அம்மா டாஸ்மாக் என்று ஏன் பெயர்வைக்கவில்லை.

இரண்டு சிங்கங்கள்
நான் ஒரு சிங்கம், அண்ணன் வைகோ ஒரு சிங்கம். இரண்டு சிங்கங்கள் ஒரே கூட்டணியில் இருக்கிறோம் என்றார் விஜயகாந்த்.

கோபப்பட்ட விஜயகாந்த்
பிரசாரத்தில் ஏராளமான தொண்டர்கள் விசிலடித்தனர். அவர்களை வைகோ அடக்கினார். அப்படியும் விசில் சத்தம் வரவே விஜயகாந்த் தன்னுடைய கூலிங்கிளாஸ் கண்ணாடியை கழற்றிவிட்டு ஒரு பார்வை பார்த்த உடனே விசில் சத்தம் சட்டென்று அடங்கியது.

சிரிச்சிக்கிட்டே பேசுறேன்
அதேபோல பிரசாரத்தில் பேசும் போது வைகோவிற்கு முதலில் பேச வழிவிட்டு பின்னர் விஜயகாந்த் பேசினார். நான் கோபத்தோட பேசுறேன்னு எல்லோரும் சொல்றாங்க. இனி சிரிச்சிக்கிட்டே பேசப்போறேன். இந்த சிரிப்பு போதுமா? என்று கேட்டு சிரித்தார்.












Click it and Unblock the Notifications