திண்டுக்கல்: ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்த்த சிறுவன் மாடு முட்டி பலி!
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டுப் போட்டியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுவனை காளை முட்டிக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், தவசிமடையில் கோயில் திருவிழாவையொட்டி இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை ஏராளமான இளைஞர்கள் அடக்க முயற்சி செய்தனர். இதில் 18க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
இதில், ஜல்லிக்கட்டுப் போட்டியை ஏராளமான பார்வையாளர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். வாடிவாசலில் இருந்து ஒரு காளையை திறந்து விட்டதும், சீறிக்கொண்டு பார்வையாளர்கள் பகுதியை நோக்கிப் பாய்ந்தது. போட்டியை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தவர்களை முட்டித்தள்ளியது. இதில் சிவக்குமார் என்ற 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
சிறுவனின் சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.











Click it and Unblock the Notifications