கிரிக்கெட் பேட் தலையில் பட்டு கோமா நிலைக்குப் போன மாணவன் மரணம் - ஆசிரியர் கைது
கிரிக்கெட் பேட் தலையில் பட்டு காயமடைந்து கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் உயிரிழந்தது தொடர்பாக ஆசிரியர் குப்புசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
நாமக்கல்: திருச்செங்கோடு அருகே கிரிக்கெட் பேட் தலையில் பட்டு கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர் விக்னேஸ்வரன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். கொலை வழக்காக பதிவு செய்து ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் நல்லூரி கந்தம்பாளையம் அடுத்த சித்தம்பூண்டியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன்,13. இவர் விட்டம்பாளையம் அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் பள்ளி விளையாட்டு நேரத்தில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டனர்.
மாணவர்களுடன் இணைந்து, ஆசிரியர்களும் கிரிக்கெட் விளையாடினர். இந்நிலையில் ஆசிரியர் ஒருவர் பவுலர் வீசிய பந்தை அடித்தார்.
ஆனால் பேட் கை நழுவி, மாணவன் விக்னேஸ்வரன் பின் தலையில் தாக்கியுள்ளது. இதையடுத்து உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில் மாணவன் கோமா நிலைக்கு சென்றுள்ளான். இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் விக்னேஸ்வரனை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று காலையில் சிகிச்சை பலனின்றி மாணவர் விக்னேஷ் மரணமடைந்தார்.
மகனின் மரணத்திற்கு ஆசிரியர்தான் காரணம் என்று பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குடிபோதையில் ஆசிரியர் தாக்கியதாலேயே விக்னேஷ்வரன் மரணமடைந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மாணவனின் பெற்றோர் புகார் பேரில் ஆசிரியர் குப்புசாமி மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவந்தனர். ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை சடலத்தை வாங்கப்போவதில்லை என்று கூறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மாணவன் விக்னேஷ்வரின் மரணத்தை அடுத்து கொலை வழக்காக பதிவு செய்து ஆசிரியர் குப்புசாமியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆசிரியர் குப்புசாமி சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.