காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதால் போன உயிர்கள் மீளாது தான், ஆனால்...: சரத்குமார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்க கூடாது என்றும், தொடர்ந்து இந்தியாவின் சார்பில் எந்தவித பிரதிநிதித்துவமும் இடம் பெற கூடாது என்றும் மத்திய அரசை வலியுறுத்தி கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இதனை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்மொழிந்த தீர்மானமும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகம் மட்டுமல்லாது, உலகெங்கும் வாழும் தமிழர்களின் உணர்வுபூர்வமான, ஒருமித்த குரலாக வரலாற்று சிறப்புமிக்கதாக இந்த தீர்மானம் திகழ்கிறது.
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்காமல் இருப்பதால் இனப்படுகொலையில் மாண்டுபோன லட்சக்கணக்கான தமிழர்கள் உயிர் மீண்டு வரப்போவது இல்லை தான். ஆனால் கொந்தளித்து குமுறிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான தமிழ் உள்ளங்களின் உணர்வை பிரதிபலிக்கும் விதமாகவும், தனது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாகவும் இம்மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளாமல் இருப்பதுதான். தமிழ் நெஞ்சங்களுக்கு குறைந்தபட்சம் ஆறுதல் அளிப்பதாக இருக்கும்.
காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காவிட்டால், இந்தியா தனிமைப்படுத்தப்படும் என்ற இலங்கையின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து விட கூடாது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மதித்து மத்திய அரசு நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு களங்கம் ஏற்படாமல் காக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications