பெண்களை குறிவைத்து கொன்று கொள்ளையடித்த கொத்தனார்: வாழ்நாள் முழுவதும் சிறை!
பெண்களை குறிவைத்து கொன்று அவர்களின் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கொத்தனாருக்கு வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்க உத்தரவிட்டு கடலூர் மகளிர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
கடலூர் : 2012ஆம் ஆண்டு முதல் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து கொன்று அவர்களின் நகைகளை கொள்ளையடித்து சென்ற கொத்தனாரை சாகும் வரை சிறையில் அடைக்க கடலூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த நபருக்கு 4000 ரூபாய் அபாரதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், நெய்வேலி வண்டிக்கார தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் கொத்தனாராக பணிபுரிந்து வந்தார். உள்ளுர் மற்றும் வெளியூர்களில் கட்டுமானப் பணிக்கு செல்லும்போது அக்கம் பக்கத்து வீடுகளை நோட்டமிட்டு, தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து கொன்றுள்ளார்.

கடந்த 2012ம் வருடம் ஜனவரி மாதத்தில் இந்திரா நகரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் வீட்டுக்குள் பட்டப்பகலில் நுழைந்த ராமலிங்கம், அவரது மனைவி சரஸ்வதியை கொலை செய்து 18 பவுன் நகையை திருடிச் சென்றுள்ளார்.இதேபோல் 2013ல் ஏரிப்பாளையம் ராமசாமி வீட்டில் பகலில் நுழைந்து அவரது மனைவி முத்தாளை கொலை செய்து அவரது நகைகளையும் சுருட்டிச் சென்றுள்ளார்.
2015ல் வடகுத்து கிராமத்தில் காய்கறி வியாபாரி மூர்த்தி வீட்டில் பட்டப்பகலில் நுழைந்த ராமலிங்கம், அவரது மனைவி ஜெயலட்சுமியை கொலை செய்து நகையை திருட முயன்றுள்ளார். அப்போது அவரது மகன் ராஜா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராமலிங்கம், கத்தியை காட்டி மிரட்டி ராஜாவை கட்டி வைத்துவிட்டு, ஜெயலட்சுமியை கொலை செய்துள்ளார். மேலும் அவர் அணிந்திருந்த 25 பவுன் நகைகளையும் அவர் திருடிச் சென்றுள்ளார்.
தொடர்ந்து வீட்டில் தனியாக இருந்த பெண்கள் கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை காவல்துறையினர் கொத்தனார் ராமலிங்கத்தை கண்டுபிடித்து கைதுசெய்தனர். அப்போது ராமலிங்கம் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த வழக்கு கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி செல்வம் நேற்று தீர்ப்பளித்தார். அப்போது ராமலிங்கம் சாகும் வரை சிறையில் அடைக்க அவர் உத்தரவிட்டார். மேலும் அபராத தொகையாக 4 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி ஆணையிட்டார்.












Click it and Unblock the Notifications