மவுலிவாக்கம் கட்டிட விபத்து: வெள்ளை அறிக்கை கேட்கிறார் விஜயகாந்த்
சென்னை: மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டிட விபத்து குறித்து விசாரணை நடத்த நீதிபதி ரகுபதியை நியமனம் செய்ததில் உள்நோக்கம் உள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தேகம் எழுப்பியுள்ளார். இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 11 மாடிக் கட்டட விபத்து குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணைய நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரகுபதி ஏற்கனவே பல விசாரணை ஆணையங்களிலும், நீதிமன்றங்களிலும் நீதிபதியாக இருந்து வருகிறார்.
பல நீதிப் பணிகளை செய்து வருபவரிடமே, இதையும் சேர்த்து வழங்குவதில் உள்நோக்கம் இருப்பதாகவே தெரிகிறது. தேசிய மனித உரிமை ஆணையம் தானாகவே முன்வந்து, இதை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு தமிழக அரசிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
எனவே, மேற்படி அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்றும், இந்த விபத்து குறித்த உண்மையான விவரங்கள் வெளி வருவதற்கு ஏதுவாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கேட்டுக் கொள்ளுகிறேன் என்று கூறியுள்ளார்.