ஜல்லிக்கட்டு போட்டி.. சீறிபாய்ந்த காளை தடுப்பு வேலியில் மோதி பரிதாபமாக பலி
பெரம்பலூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் சீறிப்பாய்ந்த காளைகளில் ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டியின் போது சீறிபாய்ந்த காளை தடுப்பு வேலியில் எதிர்பாராதவிதமாக மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் தமிழகத்தின் பல இடங்களில் அரசு அனுமதியுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள அரசலூர் கிராமத்தில், வியாழனன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இதற்காக, பெரம்பலூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 50-க்கும் மேற்பட்ட காளைகளும், 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் அழைத்துவரப்பட்டனர். மாரியம்மன் கோவில் திடலில் அமைக்கப்பட்டிருந்த வாடி வாசலில் இருந்து காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அங்கிருந்து துள்ளிக் குதித்து ஓடிய காளைகளை இளைஞர் பட்டாளம் விரட்டிப் பிடிக்க முயன்றது.
போட்டியை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டிருந்தனர். இதனிடையே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில், 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர்.
இதனிடையே, அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்த செபாஸ்டியன் என்பவரது காளையை அடக்க இளைஞர்கள் விரட்டிச் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக தடுப்புக் கட்டைகளில் மோதி பரிதாபமாக உயிரிழந்தது. அதிகாரிகளும், ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாட்டாளர்களும் முறையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யாமல் காளைகளை அவிழ்த்துவிட்டதே உயிரிழப்புக்கு காரணம் என முதற்கட்ட கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications