கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே குதித்து 60 கிலோ தங்கம் கொள்ளை.. பாளையங்கோட்டையில் பரபரப்பு
நகைக்கடையின் மேற்கூரையை இரவோடு இரவாக உடைத்து உள்ளே குதித்த மர்மநபர்கள் 60 கிலோ தங்கத்தை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இது பாளையங்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாளையங்கோட்டை: பாளையங்கோட்டையின் மையப் பகுதியில் அமைந்துள்ள அழகர் ஜூல்லரியின் மேற்கூரையை உடைத்து 60 கிலோ தங்கத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.
பாளையங்கோட்டை முக்கிய தெருவில் அழகர் ஜூல்லரி என்ற நகைக்கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையில் நேற்று வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை முறையாக மூடிவிட்டு கடை ஊழியர்கள் சென்றனர்.
ஆனால் இன்று காலை வழக்கம் போல் கடையை திறந்தால் கடை உரிமையாளருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கடையின் மேற்கூரையை கொள்ளையர்கள் இரவோடு இரவாக உடைந்து உள்ளே நுழைந்து சுமார் 60 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு சுமார் 15 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது.
இதுகுறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணைக்கு பின்னரே கொள்ளை போன தங்கத்தின் மொத்த மதிப்பு எவ்வளவு என்பது தெரிய வரும் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், கொள்ளையடித்த மர்ம நபர்கள் யார் என்ற தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.